“சமூக நீதி தலைவர்களின் பெயர்களை தவெக அரசு திட்டமிட்டு நீக்கவில்லை” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் | Periyar, Ambedkar Names to Be Included in Reservation Demands for Grants: Minister Rajmohan

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

பெரம்பலூர்: “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் பல்வேறு துறைகளின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு, தாட்கோ, பள்ளிக்கல்வித் துறை, கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.4.48 கோடி மதிப்பிலான 13 கட்டிடங்களை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 161 பயனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

Periyar Ambedkar Names to Be Included in Reservation Demands for Grants Minister Rajmohan

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. இதற்கு முந்தைய ஆட்சியில் நீக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தோம். அதன்படி திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்கள் இடஒதுக்கீடு திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தது. எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

ஆனால் நாங்கள் வேண்டுமென்று சமூக நீதிதலைவர்களின் பெயர்களை நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும்.” என்றார்.

அடுத்த மே மாதத்திற்குள் தவெக அரசு கவிழ்ந்து , மறு தேர்தல் நடைபெறும் என்று திமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், ” ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்’ பாடல் தான் நினைவுக்கு வருகிறது. இது தெரியாமல் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கான மாதவிடாய் விடுமுறை குறித்து நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற கருத்தை பரிசீலனை செய்யும். ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு பாரபட்சமின்றி விடுமுறை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *