International
oi-Halley Karthik
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலக்கரி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் முழுவதும் 4,000 மெகவாட்டிற்கும் அதிகமான மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகள் இருளில் மூழ்கி, மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் போதிய எரிபொருள் இல்லை. இதனால் மின் உற்பத்தி பல மடங்கு அப்படியே சரிந்திருக்கிறது. இது ஒட்டு மொத்த மின் தேவையில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டிருக்கிறது. லாகூர், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
குறைந்தபட்சம் தினமும் 2-3 மணி நேரம் வரை இந்த பகுதியில் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். லாகூர் மின் விநியோக நிறுவனம் மட்டும் தனியாக 1,200 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கிறது. மின் விநியோக கட்டமைப்பில் ஏற்படும் தொடர் தொழில்நுட்ப கோளாறுகள்தான் இந்த மின்வெட்டுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல மின் உற்பத்திக்கு காரணமான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்த சரக்கு கப்பல் சரியான நேரத்திற்கு பாகிஸ்தானுக்கு போகவில்லை. இதுவும் மின் உற்பத்தி பாதிக்கப்பட முக்கிய காரணமாகும். ஏற்கெனவே பல பிரச்சனைகளில் சிக்கியிருந்த பாகிஸ்தான் மின் உற்பத்தி கட்டமைப்பு.. இந்த எரிபொருள் தடை காரணமாக மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சரி இப்படியெல்லாம் இருந்தால்.. மின் கட்டணத்தையாவது குறைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கொஞ்சமாவது நிம்மதியடைவார்கள். ஆனால், பாகிஸ்தானில் இதற்கு எதிர்மறையாக நடந்திருக்கிறது. அதாவது, நாடு முழுவதும் ஒரு யூனிட்டுக்கு 0.75 பாகிஸ்தான் ரூபாயை உயர்த்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஜூன் மாதத்திற்கான மாதாந்திர எரிபொருள் செலவை சரிய செய்ய முடியவில்லை என்று சாக்கு சொல்லி விலையை உயர்த்திருக்கிறது. இந்த கட்டண உயர்வு இந்த மாசம் பில்லை கட்டும்போதுதான் தெரியும்.
போதுமான நேரம் மின்சாரம் இல்லை, கரண்டு பில்லும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது, வேலை வாய்ப்பு, வருமானம் இல்லை, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு இல்லை.. இப்படி பாகிஸ்தான் முழுவதும் கடுமையான பிரச்சனையில் போராடி வருவதால்.. மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.