சிக்கன் குனியா வைரஸை விரட்டும் பசுவின் ‘கோமியம்’.. மனிதர்கள் பயன்படுத்தலாமா? ஐஐடி ரூர்க்கி விளக்கம் | Cow Urine distillate has significant antiviral activity against Chikungunya Virus, says IIT Roorkee researchers

Spread the love

India

-Nantha Kumar R

டேராடூன்: சிக்கன்குனியா வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை பசுமாட்டின் கோமியத்துக்கு இருப்பதாக ஐஐடி ரூர்க்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவாதத்தை கிளப்பிய நிலையில் இதனை மனிதர்கள் பயன்படுத்தலாமா? இல்லையா? என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

IIT Roorkee research on potential Chikungunya antiviral compounds

இந்தியாவில் ஆண்டுதோறும் கொசுக்களால் பரவும் நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் ஒன்று தான் சிக்கன்குனியா. ஐஐடி ரூர்க்கி (IIT Roorkee) சார்பில் பசுமாட்டின் கோமியம் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

ஐஐடி ரூர்க்கியின் பயோசயின்சஸ் மற்றும் பயோஇன்ஜினியரிங் துறையை சேர்ந்த பேராசிரியர் ஷைலி தோமர் மற்றும் அவரது குழுவினர், இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத மற்றும் உயிரியல் மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவுகள் ‘ஏசிஎஸ் அக்ரிகல்சுரல் சயின்ஸ் & டெக்னாலஜி’ (ACS Agricultural Science & Technology) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”கோமிய வடிநீர் (பசுவின் கோமியத்தை கொதிக்க வைத்து அதன் ஆவியில் இருந்து கிடைக்கும் நீர்) சிக்கன்குனியா வைரஸ் பாதிப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. சிக்குன்குனியா வைரஸ் அளவை 90 சதவீதத்திற்கும் மேலாக குறைக்கிறது.

அதாவது கோமிய வடிநீர், தைமோகுயினோன் (கருஞ்சீரகத்தில் இருந்து பெறப்படுவது) மற்றும் பைப்பரின் (மிளகிலிருந்து பெறப்படுவது) ஆகியவற்றின் கலவையை கொண்டு பரிசோதித்தபோது இது சாத்தியமாகி உள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் 99.85 சதவீதம் வரை வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.

இதற்கு அந்த கலவையில் உள்ள பென்சாயிக் அமிலம் (benzoic acid), ஹிப்புரிக் அமிலம் (hippuric acid) மற்றும் ஒலிக் அமிலம் (oleic acid) ஆகியவை தான் முக்கிய காரணமாகும். இந்த பொருட்கள் மனித உடலில் சிக்கன்குனியா வைரஸ் பெருக்கமடைவதற்கு தேவையான அத்தியாவசிய புரதங்களை சிதைக்கிறது. இதனால் வைரஸ் பாதிப்பு குறைக்கிறது.

ஒரு வரியில் கூற வேண்டும் என்றால் சிக்கன்குனியா வைரஸ் தன்னைத்தானே பெருக்கி கொள்ள தேவையான என்சைமை இந்த கலவை தடுத்து நிறுத்துகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய மைல்கல்லாகும். இது எதிர்கால ஆன்டிவைரல் மருந்து உருவாக்கத்திற்கு இவை சிறந்த மாற்றாக அமையும்” என கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ஐஐடி ரூர்க்கியின் இயக்குநர் பேராசிரியர் கமல் கிஷோர் பந்த் கூறுகையில், ”புதிதாகத் தோன்றும் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வைரஸ் நோய்களுக்கு புதுமையான, மலிவான மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தீர்வுகள் தேவைப்படுகின்றன. பாரம்பரிய முறை மற்றும் நவீன பயோடெக்னாலஜியையும் இணைத்து, உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்வதற்காக ஐஐடி ரூர்க்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இதுபற்றி பேராசிரியர் ஷைலி தோமர் கூறுகையில், ”எங்களது ஆராய்ச்சி ஆயுர்வேத கோமியத்தில் (Gau mutra ark) வைரஸ் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு காரணமான குறிப்பிட்ட பயோஆக்டிவ் மூலக்கூறுகளை அடையாளம் காண்கிறது. அதன்பிறகு கோமிய கலவை சிக்குன்குனியா மற்றும் பிற தொடர்புடைய வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்பட்டு அழிக்கிறது. இதனை சிகிச்சைக்கு பயன்படுத்த இன்னும் பல ஆய்வுகள் தேவையாக உள்ளன” என்றார்.

மேலும் இந்த கோமிய கலவையை சிக்கன்குனியாவை சரிசெய்ய மனிதர்கள் பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கு, ”இந்த கோமிய கலவை சிக்கன்குனியா வைரஸ் பெருக்கத்தை உடலில் கட்டுப்படுத்துவது உறுதியானாலும், இன்னும் பல சோதனைகள் உள்ளன. இதனால் கோமியத்தை நேரடியாக சிக்கன்குனியாவுக்கு எதிராக பயன்படுத்த தற்போது அனுமதியில்லை.

அதேவேளையில் சிக்கன்குனியா மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கோமியத்தைப் பயன்படுத்தவும் இது பரிந்துரைக்கவில்லை. மனிதர்களுக்குப் பாதுகாப்பான அளவை தீர்மானிக்க மேலும் பல மருத்துவ பரிசோதனைகளும் கூடுதல் ஆய்வுகளும் தேவைப்படுகின்றன” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *