கண்ணைப் பறிக்கும் பிரம்மாண்ட காரை வீடுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கணக்கு வழக்கில் கறாரான வணிகப் பாரம்பரியம்… இவைதான் செட்டிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை. ஆனால், கால ஓட்டத்தில் அந்தப் பாரம்பரியத்தின் மிச்சங்கள் பலவும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
அவற்றை அழியாமல் பாதுகாத்து, ஒரு அழகிய மாளிகைக்குள் அருங்காட்சியகமாக்கி இருக்கிறார் சா.லெ.சு.பழனியப்பன்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி – பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்திருக்கிறது இந்த ‘செட்டியார் பாரம்பர்ய அருங்காட்சியகம்’. இதன் கதவைத் திறந்தாலே நம்மை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்தக் கால இயந்திரம், மே 8, 2022 அன்று திறக்கப்பட்டது.
கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த கம்பலை சாத்தப்ப செட்டியாரின் பேரனான சா.லெ.சு.பழனியப்பன், தன் முன்னோர்களின் வியக்கவைக்கும் வாழ்வியலைத் திரட்டி, இந்த வைரவன்பட்டி மண்ணில் ஒரு மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமாக மாற்றிப் பாதுகாத்து வருகிறார்.
நான்கு தலைமுறை உழைப்பு:
“வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நமது பாரம்பரியத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, சுமார் 4000 சதுர அடியில், மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தை நான்கு வருட உழைப்பில் உருவாக்கியுள்ளோம்.
செட்டிநாட்டுப் பாணியில், ஐரோப்பிய மற்றும் இந்தோ-சாரசெனிக் கட்டிடக் கலையின் தாக்கத்தோடு இந்த அரண்மனை போன்ற அருங்காட்சியகம் உருப்பெற்றது. தற்போது தரைத்தளத்திலும், முதல் தளத்திலும் நாங்கள் நான்கு தலைமுறைகளாகச் சேகரித்த அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” என்கிறார் பழனியப்பன்.

இவருடைய பாட்டையா இலங்கையில் பெரிய வணிகராக இருந்தவர். இலங்கை உலக வணிகத்தின் மையப்புள்ளியாக இருந்ததால், கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த அரிய பொருட்கள் பலவற்றை அவர் வாங்கி வந்துள்ளார். அவர்கள் எழுதிய கடிதங்கள், ஓலைச்சுவடிகள் என 1000-க்கும் மேற்பட்ட கடிதங்கள், 1922-ம் ஆண்டைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், வருமான வரி சீல் வைக்கப்பட்ட கணக்குப் புத்தகங்கள் என அனைத்தும் இங்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாக உள்ளன.