சென்னையில் விதைக்கப்பட்ட மருத்துவக் கனவு! – மேரி ஷார்லீப்பின் தியாக வரலாறு | Pioneer Dr. Mary Scharlieb’s Legacy in Women’s Healthcare

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பெண்களுக்கான மருத்துவக் கல்விக்கும் மருத்துவச் சேவைக்கும் புதிய பாதையை உருவாக்கிய முன்னோடிகளில் முக்கியமானவர் மேரி ஆன் டேகோம் ஷார்லீப். தமிழக மருத்துவ வரலாற்றில் தனித்துவமான இடம்பெற்ற மேரி ஆன் டேகோம் ஷார்லீப் தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்ல என்றாலும், அவரது மருத்துவ வாழ்க்கையின் தொடக்கமும் வளர்ச்சியும் சென்னை நகரத்துடன் தொடர்புடையவை.

மேரி ஆன் டகோம்ப் ஷார்லீப் 1845ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் நாள், இங்கிலாந்தின் இலண்டன் நகரிலுள்ள பெத்னல் கிரீன் பகுதியில் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் சான்ட்லர் பேர்ட் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் செய்து வந்தார். தாயார் மேரி டகோம்ப். மேரி பிறந்த பத்து நாட்களிலேயே அவரது தாயார் உயிரிழந்தார். பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்த மேரி, தாயை இழந்த பின்னர் தனது பாட்டியின் பராமரிப்பில் பாட்டியின் தீவிர கிறிஸ்தவ சுவிசேஷ குடும்பச் சூழலில் வளர்ந்தார். வளர்ந்தார். ஐந்து வயதாக இருந்தபோது தந்தை மறுமணம் செய்து கொண்ட பிறகு வளர்ப்புத் தாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.

மேரி ஷார்லீப் தனது தொடக்கக் கல்வியை இலண்டனில் உள்ள நியூவிங்டன் கிரீன் பகுதியில் செயல்பட்ட தனியார் பள்ளியில் பயின்றார். பின்னர், இலண்டனின் கிளாபம் பகுதியில் திருமதி.அட்கின்ஸ் நடத்தி வந்த பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்றார். மேரி ஷார்லீப் தனது பத்தொன்பதாவது வயதில் வழக்கறிஞராகப் பணியாற்றிய வில்லியம் மேசன் ஷார்லீப்பைச் சந்தித்தார். அவர் மேரியைவிட வயதில் மூத்தவராக இருந்ததுடன், திருமணத்திற்குப் பின்னர் இந்தியாவுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், இத்திருமணத்திற்கு மேரியின் குடும்பத்தினர் தொடக்கத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேரியின் உறுதியான விருப்பத்தின் காரணமாக 1865-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, 1866-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தம்பதியினர் கப்பல் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

சென்னையில் எழும்பூரிலுள்ள ஸ்பர்டாங்க் சாலையில் வசித்தனர். வழக்கறிஞராகப் பணியாற்றிய கணவருக்கு உதவியாக, அவர் நடத்தி வந்த சட்ட இதழின் தொகுப்புப் பணிகளிலும் மேரி ஈடுபட்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உட்பட மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *