'சொந்த ஊரிலேயே அகதி போல இருந்தோம்; சொன்னதை செஞ்சுட்டாரு முதல்வர்.!'- நெகிழும் பரந்தூர் போராட்டகுழு

Spread the love

‘பரந்தூர் விமான நிலையத் திட்டம்’ ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் ‘110’ விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்குழுவிடம் பேசினோம்.

பரந்தூர் மக்கள்
பரந்தூர் மக்கள்

பரந்தூர் விமான நிலையத்திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழு செயலாளர் கதிரேசன் பேசுகையில், “பரந்தூர் – ஏகனாபுரம் மக்கள் அளவில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்களின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான்காண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போராடினோம்.

ஆரம்பத்தில் திமுக அரசு எங்களின் மீது சொல்லொணா அடக்குமுறைகளை ஏவியது. கிராமங்களை சுற்றி 36 இடங்களில் செக் போஸ்ட் அமைத்து சிசிடிவி கேமராக்கள் அமைத்து எங்களை கண்காணித்தார்கள். நாங்கள் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்த எங்களின் சொந்த கிராமத்துக்குள் நாங்கள் நுழைய காவலர்கள் ஆதார் கார்டு கேட்பார்கள். சொந்த ஊரிலேயே அகதி போல இருந்தோம். எங்களை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்கள்.

CM Vijay
CM Vijay

விஜய் சார் எங்களின் ஊருக்கு வந்த போது கூட அவரை காவல்துறை ஏகனாபுரத்துக்குள் விடவில்லையே. பக்கத்து கிராமமான பொடவூரில்தான் விஜய் சார் எங்களை சந்தித்தார். பரந்தூர் விவகாரத்தை விஜய்யின் வருகைக்கு முன் விஜய்யின் வருகைக்குப் பின் என இரண்டாக பிரிக்கலாம். அவர் வந்த பிறகுதான் பரந்தூர் ஏகனாபுரம் பற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

‘எங்களோடு உறுதியாக நிற்பேன்’ என அப்போது வாக்குறுதி கொடுத்தார். உயர் நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்குக்காக நாங்கள் ஒரு பைசாவை கூட செலவளிக்கவில்லை. எல்லா செலவையும் விஜய் சார்தான் ஏற்றுக்கொண்டார். ஆட்சிக்கு வந்தவுடன் விஜய் பின்வாங்கி விடுவார். அவரால் அழுத்தங்களை சமாளிக்க முடியாது என என்னென்னவோ சொன்னார்கள். எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. அதனால்தான் கிராமசபை கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

CM Vijay
CM Vijay

இதோ இன்று அவரே ‘பரந்தூர் திட்டம் ரத்து’ என அறிவித்துவிட்டார். முதல்வருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது. 100 நாளில் இந்த அரசு என்ன செய்தது என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ‘பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து’ என்பதை விட வேறென்ன சாதனை இருக்க முடியும்.’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *