கருத்து மோதல்கள்…
இருப்பினும், அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முழுமையாக விலகிக்கொண்டார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

பதவி கொடுக்காத பாஜக
இதனிடையே சிபிஎஸ்இ விவகாரத்தில் விமர்சித்து கருத்து வெளியிட, அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற கருத்துகள் தீவிரமடைந்தன.
மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவருக்கு, தற்போது வரை கட்சியிலோ அல்லது மத்திய அரசிலோ எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை.
மறுபுறம், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, தான் அதே பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்குத் தேசியத் தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி கிடைப்பது சந்தேகமாக மாறியுள்ளது.