ஒரு காலத்தில் `உங்கள் ATM கார்டு முடக்கப்படும், OTP சொல்லுங்கோ, டிஜிட்டல் அரெஸ்ட்” என்று பொதுமக்களைக் குறிவைத்து ஏமாற்றிய மோசடி கும்பல்கள், இப்போது தங்களின் இலக்கை மாற்றியிருக்கின்றன. காரணம், பொதுமக்கள் பலர் விழித்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால், மோசடிக்காரர்களின் புத்தி மட்டும் அங்கேயே நின்றுவிடவில்லை. காலத்திற்கு ஏற்ப தங்களையும் அப்டேட் செய்து மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அவர்கள் குறிவைப்பது வணிகர்களை.
குறிப்பாக, “நகையை மீட்டு மீண்டும் அடகு வைக்க பணம் தருகிறோம்”, “நகையை மீட்டு விற்பனை செய்ய நிதி உதவி” போன்ற சேவைகளை வழங்கும் தொழில்முனைவோர்களை இந்த புதிய மோசடிக் கும்பலின் முக்கிய இலக்காக மாறியுள்ளனர்.
அண்மையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு சாட்சியாக உள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை வடமாநில நபர் ஒருவர் தொடர்பு கொள்கிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.5.60 லட்சம் மதிப்புள்ள நகையை அடகு வைத்திருப்பதாகவும், மே 25ம் தேதியுடன் அடகு காலம் முடிந்ததாகவும், நகையை மீட்க பணம் இல்லாததால் உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறார்.
“நீங்கள் பணம் கொடுங்கள்… நகையை மீட்டவுடன் உங்களிடமே விற்றுவிடுகிறேன். உங்களுக்கு ஏற்ற லாபமும் கிடைக்கும்” என்று நம்பிக்கை விதைக்கிறார்.
இதோடு அவர் நிற்கவில்லை. வங்கியின் அடகு ரசீது, அடையாள ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் கொடுக்கிறார். அவற்றைப் பார்த்தால் சாதாரண மனிதர் மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த வணிகருக்குக்கூட சந்தேகம் வராது.