தங்க நகை வாங்குவோருக்கு ‘ரெட் கார்பெட்’ வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? | Gold Loan Market Hits Rs.18.6 Lakh Crore: Indians Monetise Gold as Banks See Safe Lending Boom

Spread the love

Business

oi-Prasanna Venkatesh

இந்திய குடும்பங்களின் வெறும் சேமிப்பு, சொத்து என்ற அளவில் மட்டுமே இருந்த தங்கம், தற்போது நிதி திரட்டும் முக்கிய கருவியாக மாறி வருகிறது. “அவசர நேரத்தில் அடகு வைக்கப்படும் சொத்து” என்ற நிலையிலிருந்து, “தேவைக்கேற்ப பணமாக்கப்படும் முதலீடு” என்ற நிலைக்கு தங்கம் நகர்ந்திருப்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் உணர்த்துகிறது.

2025-26 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் தங்கக் கடன் சந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 18.6 லட்சம் கோடி ரூபாய் அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 50.4 சதவீதம் உயர்வாகும். இன்னும் சொல்லப்போனால் இந்திய வங்கிகளில் தற்போது வீட்டு கடன்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய ரீடைல் கடன் பிரிவாக தங்கக் கடன்கள் உருவெடுத்துள்ளன.

Gold loan Gold loan market India gold loan growth FY26 Indians monetise gold gold loan second largest retail credit gold price rise boosts borrowing banks gold loan boom secured lending India household gold holdings monetisation gold loan Rs 18 6 lakh crore RBI gold loan regulations 2026 18 6 RBI

அதாவது மக்கள் பர்சனல் லோன், கன்ஸ்யூமர் லோன்களை அதிக வட்டியில் வாங்குவதற்கு பதிலாக கையில் இருக்கும் தங்கத்தை பணமாக்கி வருவது தெள்ளதெளிவாக தெரிகிறது. இதன் மூலம் பல கோடி மக்களின் சிபில் ஸ்கோரும் பாதுகாக்கப்படும்.

தங்கம் இனி வெறும் சேமிப்பு இல்லை

பல ஆண்டுகளாக இந்திய குடும்பங்கள் தங்கத்தை சேமிக்கும் கருவியாகவும், குடும்ப நெருக்கடி அல்லது அவசர தேவைகளின் போது மட்டுமே தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்க நகைகளை பணமாக்கி தொழில், முதலீடு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தங்க விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதும், பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருப்பதும் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

4 மடங்கு வளர்ந்த தங்கக் கடன் சந்தை

2022 மார்ச் மாதத்திலிருந்து தங்கக் கடன் நிலுவைத் தொகை கிட்டத்தட்ட 4 மடங்கு உயர்ந்துள்ளது. ரீடைல் கடன் சந்தையில் தங்கக் கடன்களின் பங்கு 2022-ல் 5.9 சதவீதமாக இருந்த நிலையில், 2025 டிசம்பரில் அது 11.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிய கடன்களிலும் இந்த வேகம் தொடர்கிறது. 2025-26 நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் புதிய தங்கக் கடன்களின் மதிப்பு ரூ.7.6 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 115 சதவீதம் அதிகம்.

தங்க விலை உயர்வால் கடன் அதிகரிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைக்கு முன்பைவிட அதிக கடன் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு 50 கிராம் தங்க நகைக்கு கிடைத்த கடன் தொகையை விட இன்று அதே நகைக்கு பல லட்சம் ரூபாய் கூடுதலாக பெற முடிகிறது. இதனால் புதிய நகைகளை வாங்காமல் அதிகளவு கடன் பெற்றுள்ளனர்.

வங்கிகளுக்கு இன்னும் பெரிய வாய்ப்பு

இந்திய குடும்பங்களிடம் 25,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதில் சுமார் 10 சதவீத தங்கம் மட்டுமே தற்போது கடன்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்திய வீடுகளில் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இது மற்ற கடன்களை காட்டிலும் பாதுகாப்பானது என்பதால் வங்கிகளும் அதிகளவில் தங்க கடன் அளிக்க தயாராகி வருகிறது.

பர்சனல் லோன் போன்றவை பிணையம் இல்லாமல் கொடுக்கப்படும் கடன் என்பதால் ஆபத்து காரணிகள் கொண்டவை, ஆனால் தங்கம் அப்படியில்லை. தங்க நகை மீது கடன் கொடுக்கும்போதே அதன் மதிப்பில் 20-30 சதவீதம் குறைவாக தான் கொடுக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் வங்கிகளுக்கி எப்படி பார்த்தாலும் லாபம் தான். இதனால் வங்கிகள் தங்க நகை கொடுப்பதில் ஆர்வமாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *