தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

Spread the love

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த 9ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடந்துமுடிந்தது.

இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும் மேற்குவங்கம் மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்றது.

இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே இந்தியத் தேர்தல் ஆணையம், ஐந்து மாநிலத் தேர்தலும் நிறைவடைந்த பிறகே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

Tamilnadu - exit poll
Tamilnadu – exit poll

அதன்படி நேற்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்தன. வெளியான கருத்துக் கணிப்புகள் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில இடங்களில் முடிவுகள் தெளிவாகத் தென்படுகின்றன. சில இடங்களில் முடிவுகள் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், என் கணிப்பின்படி, தமிழ்நாட்டில் திமுக-விற்குத் தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது குறித்து நான் திமுக தலைமையுடனும் பேசினேன்.

அதே போன்று கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எங்கள் களத்தில் உள்ள கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், அவர்கள் சுட்டிக்காட்டும் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

5 states Exit Poll
5 states Exit Poll

அதேபோல புதுச்சேரியைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அங்கும் எங்களுடைய வெற்றிக்கான எதிர்பார்ப்புகள் உள்ளன. போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. இன்னும் ஓரிரு நாள்கள் பொறுத்திருந்து முடிவுகளைப் பார்க்கலாம்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து மேற்கு வங்கம் குறித்து கருத்து தெரிவித்த கார்கே, “எங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் தனது அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எங்கள் பலத்தை அங்கு அதிகரித்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *