நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரம் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தன் எக்ஸ் பக்கத்தில், “இளம் தலைமுறையினரின் குரலையும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் நாளைய பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெறும், அதில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-கள் சந்திப்புக் கூட்டம் நடத்தவும், எஞ்சியிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தங்கள் வியூகம் குறித்து ஆலோசிக்கவிருப்பதாகவும் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றம் வருகை தந்தனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “தேர்தல் முறைகேடு விவகாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதை போகிறபோக்கில் அரசு புறக்கணிக்கக்கூடாது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் சந்திப்போம். தற்போது, மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இன்னமும் காவல்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது. விழிப்புணர்வடைந்துள்ள இளைஞர்களை அரசு சவாலாகக் கருதக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளையில், முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, ஆளும் என்.டி.ஏ கூட்டணி எம்பி-க்கள் “பிரதான் ஜிந்தாபாத்” என முழக்கமிட்டு, மாலை மரியாதையுடன் வரவேற்பளித்தனர்.
அதைத் தொடர்ந்து அவை கூடியது. அவையில், நீட் வினாத்தாள் கசிவு, ஜூலை 20 அன்று நடைபெற்ற ‘சன்சத் சலோ’ போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தன. மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானமும், மாநிலங்களவையில் அலுவல் இடைநிறுத்த நோட்டீஸ்களும் தாக்கல் செய்யப்பட்டதால், அவைகளில் கடும் அமளி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அவையை சீர்குலைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை சபாநாயகர் எச்சரித்தார்.

சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், நாடாளுமன்ற வளாகத்தின் ‘மகர த்வார்’ பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, “2004 முதல் 2026 வரை, ராகுல் காந்தி பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர் அங்கு என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அதில் வெளிப்படைத்தன்மை இல்லையே? எனவே, அவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு தீர்மானத்தை நாங்கள் கொண்டு வருவோம். மேலும், 2004 முதல் 2026 வரையிலான அவரது அனைத்து வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு அரசை வலியுறுத்துவோம்.” எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை. இதற்கு அமித் ஷா-தான் காரணம்” எனக் குற்றம் சாட்டினார்.
பீகாரின் சிவான் பகுதியில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு/ஏ.கே-47 பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்பி பவன் கேரா, உள்துறை அமைச்சர் விளக்கமளிக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளிக்கு மத்தியில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மற்றும் சில கட்சிகளுக்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த விவகாரம் திசை திருப்பப்பட அனுமதிக்காதீர்கள். இந்த நேரத்தில், தேர்வு செயல்முறையை வலுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றி விவாதிப்பதே முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நலன்களுக்கு நேரடியாக உதவுகின்றன. இந்த விவகாரத்தைத் திசை திருப்பவோ அல்லது மாற்றவோ எந்த முயற்சியும் செய்யக்கூடாது. மாணவர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவில் நாங்கள் உறுதியாகக் கவனம் செலுத்துகிறோம்.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதே எங்கள் முன்னுரிமை. இது மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான மசோதா. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சபையின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவையின் மையப்பகுதிக்குச் சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தும் அமளி அடங்கவில்லை. இதனால், இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுச் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.