Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: யுபுடி20 லீக் தொடரில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பிரசாந்த் வீர், தோனி ஸ்டைலில் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இந்த சீசனில் பிரசாந்த் வீர் இன்னும் முதிர்ச்சி அடைந்த வீரராக உருவாறி இருக்கும் சூழலில், அவர் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியால் ரூ.14.20 கோடிக்காக வாங்கப்பட்ட வீரர் பிரசாந்த் வீர். ஆனால் அவருக்கு சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜடேஜாவுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்ட பிரசாந்த் வீர், பவுலிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பேட்டிங்கில் அவரின் ஆட்டம் பாராட்டுக்களை பெற்றது.

இருப்பினும் பிரசாந்த் வீர் சிஎஸ்கே அணியால் இந்த சீசனில் தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவரையுமே சிஎஸ்கே அணி விடுவித்து மீண்டும் வாங்க வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் சுமார் ரூ.30 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்க முடியும்.
ஆனால் கார்த்திக் சர்மா தொடர்ச்சியாக சிஎஸ்கே அகாடமியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கார்த்திக் சர்மாவை மட்டும் தக்க வைத்து கொள்ளலாமா என்ற ஆலோசனையில் சிஎஸ்கே நிர்வாகம் உள்ளது. இப்படியான சூழலில் யுபிடி20 லீக் தொடரில் பிரசாந்த் வீரின் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பிரசாந்த் வீர் 10வது ஓவரின் முதல் பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக சிக்சரை விளாசி தள்ளினார். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரசாந்த் வீர் 27 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 50 ரன்களை அடித்து அசத்தினார்.
யுபிடி20 லீக் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி எப்போதும் ஒரு வீரரை வாங்கும். ஏற்கனவே சமீர் ரிஸ்வியை ரூ.8 கோடி கொடுத்து சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது. அதேபோல் பிரசாந்த் வீரை வாங்கியது. இம்முறை பிரசாந்த் வீர் இன்னும் முன்னேற்றம் அடைந்த வீரராக வளர்ந்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் முடிவில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
