ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்கின்ற இதே சமூகம்தான் அவற்றில் குப்பை, அழுக்குத் துணிகளை வீசி நீர்நிலைகளையும், ஆற்றின் கரைகளையும் நாசப்படுத்தி வருகிறது. எவற்றையும், எந்த விதமான பொது இடங்களையும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும், பொறுப்பேற்றுக்கொள்ளும் என்கிற பொறுப்பற்ற தன்மைதான் இன்று மக்கள் எளிமையாக பொதுஇடங்களை அசுத்தம் செய்யவதற்கு காரணமாக இருக்கிறது.
தனிமனித ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிற இக்காலத்தில் கல்லிடைக்குறிச்சியில் லூர்துராஜா என்பவர், தாமிரபரணியின் குறிப்பிட்ட கரையோர பகுதியைச் சுத்தமாக்கி, பூங்கா அமைத்து 3 ஏக்கருக்கு பசுமைக் காட்டை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து லூர்துராஜாவிடம் பேசியபோது,
“வீரவநல்லூர் என் சொந்த ஊர். நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என் தங்கை உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், காலையில் வீட்டைப் பார்த்துக்கொண்டு, மதிய நேரத்தில் ஆற்றின் கரையோரம் வந்துவிடுவேன். தினந்தோறும் இங்கு வருபவர்களில் பலரும் நெகிழிப்பை, துணி இவற்றையெல்லாம் ஆற்றிலும், ஆற்றின் கரையோரத்திலும் வீசி விடுவார்கள். இவற்றை அள்ளி எடுப்பது சிரமம் என்றாலும் இதுவே என் தினசரி வேலையாகவே மாறிவிட்டது. நான் தனியே எங்கும் வேலைக்குச் செல்வதில்லை. பட்டன் செல்தான் இப்போதும் பயன்படுத்துகிறேன்.
காட்டைச் சுத்தமாக்குவதையே என் முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டேன். இங்கு வருபவர்கள் ஆற்றிலும், ஆற்றின் கரையோரத்திலும் சிறுநீர், மலம் கழித்துவிடுவார்கள். இன்னும் மனிதர்கள் மாறவில்லை. ஆற்றிலும், கரையோரத்தில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூடாது என்கிற அடிப்படை புரிதல்கூட நம் மக்களிடம் இருப்பதில்லை. படித்தவன், படிக்காதவன் என்று அனைவரும் இதே வேலையைத்தான் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். இப்படி ஒரு முறை இங்கு குளிக்க வந்த இளைஞர் ஒருவர் தன் இயற்கை உபாதைகளைக் கழித்து ஆற்றை அசுத்தபடுத்தினார். நான் அறிவுரை கூறினேன் என்பதால், என்னை செருப்பால் அடித்தார். இந்த மாதிரியான பல மனிதர்களைக் கடந்துதான் என் தினசரி வாழ்க்கை செல்கிறது.”
எப்படி ஆற்றின் கரையோரம் 3 ஏக்கருக்கு காட்டை உருவாக்கினீர்கள்?
“PWD- ல் இருந்து முதலில் ஒரு மரம் நட்டார்கள். பின்பு பராமரிக்காமல் போய்விட்டார்கள். நானும் என் ஐந்து தம்பிகளும் இணைந்துதான் இந்த இடத்தைப் பராமரித்து வருகிறோம். குடத்தில்தான் நீரெடுத்து மரங்களுக்கு நீர்ப் பாய்ச்சினோம். இன்று அவை 3 ஏக்கராக வளர்ந்துள்ளது. உள்ளே தூரம் சென்றால் பாம்புகள் இருக்கும். இந்தக் காட்டைச் சுற்றி வலைபோடக் காரணம், உள்ளே இங்கு வரும் பலரும் காட்டைச் சுற்றிப் பார்க்காமல், உள்ளே மதுகுடிக்கவும், ஆற்றையும், ஆற்றின் கரையோரங்களையும் நாசப்படுத்தவுமே வருகிறார்கள். இதனால்தான் இவ்விடத்தை அதிகமாக தினமும் பாதுகாக்க வேண்டி இருக்கிறது.