காவிரிக்கரையில் ஏராளமான சிவத்தலங்கள் உள்ளன. அவற்றில் சோழ மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் பல. ஒவ்வோர் ஆலயமும் ஒவ்வொரு சிறப்பினை உடையது அந்த வகையில் துடையூர் மிகவும் முக்கியமானது.
திருச்சி- நாமக்கல் சாலையில், சமயபுரம் டோல்கேட் மற்றும் நொச்சியத்துக்கு அருகில் உள்ள துடையூரில் அமைந்திருக்கிறது ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் பேருந்தில் பயணித்தால், துடையூர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
முன்னொரு காலத்தில் சிவனடியார் ஒருவர் இங்கு பிராகார வலம் வரும்போது பாம்பு ஒன்று தீண்டியது. அருகில் யாரும் இல்லை. செய்வதறியாத அந்த அடியார், “சிவமே கதி’ என அங்கேயே அமர்ந்தார். சிவநாமம் ஜபித்தார்.
என்ன ஆச்சர்யம்… சிறிது நேரத்தில் சிவபெருமானின் அருளால் உடலில் ஏறிய விஷம் முறிந்தது. இதனால் இத்தல் மூலவர் விஷமங்களேஷ்வரர் என்னும் திருப்பெயரைப் பெற்றார். இன்றும் விஷக்கடி என வருபவர்களுக்கு மூலவருக்கு அபிேஷகம் செய்த திருநீறு தரப்படுகிறது. அதை வாங்கி பூசிக்கொண்டால் பாதிப்புகள் குறையும் என்கிறார்கள்.

பழைமையான இந்தக் கோயில் கண்டராதித்த சோழனால் கட்டப்பட்டது. ஒருகாலத்தில் கொள்ளிடக்கரையில் கடம்ப வனத்தில் பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் தற்போது சிறியதாக மாறினாலும் அதன் மகிமையும் எழிலும் அப்படியே உள்ளது. இந்த ஆலயத்தின் சிற்பங்கள் காண வேண்டிய சிறப்பினை உடையவை.
இந்தத் தலம் மிகவும் முக்கியமானதாக விளங்கக் காரணம், இங்கே மும்மூர்த்திகளும் அருள்பாலிப்பதுதான். இங்கே மூலவராக ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீமங்களாம்பிகை. அடுத்து, கோஷ்டத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவியும், பிராகாரத்தில் அவரின் கணவர் ஸ்ரீபிரம்மாவும் தரிசனம் தருகின்றனர்.
அதேபோல், மடியில் தாயாரை இருத்திக்கொண்டு ஸ்ரீலக்ஷ்மி நாராயணராக, திருமால் காட்சி தருகிறார். திருநாவுக்கரசர் இத்தலத்தைத் தன் பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளது சிறப்பு.