கொங்கு கால பைரவர் தடைகளைத் தகர்த்தெறியும் வல்லமைக் கொண்டவர், பக்தர்களுக்கு நேரும் எந்தவொரு தடையையும் தகர்த்து, தன் இன்னருளால் காத்தருள்வார் கொங்கு கால பைரவர். பைரவருக்கு உகந்த அஷ்டமி தினங்களில், பைரவருக்குப் பிடித்தமான சிவப்பு வஸ்திரம், செவ்வரளி மாலை, மாதுளம் பழங்கள் ஆகியவற்றை வைத்துப் படைத்து, எந்தவொரு காரியத்தை வேண்டி னாலும், விரைவில் அதை நிவர்த்தியாக்கித் தருவார் பைரவர்.
திருமணத்தடை உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்துகொண்டு, விபூதி அபிஷேகத்தில் அருள்பாலிக்கும் கால பைரவரைத் தரிசித்தால், உடனடியாக நல்ல வரன் அமைந்து, திருமண வாழ்க்கை சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை. எதிரி பயம் நீங்க, கால பைரவருக்கு வடை மாலையும், வெண் பொங்கலும் நிவேதனம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், எந்தவொரு வேண்டுதலாக இருந்தாலும், பைரவருக்கு, ‘மிளகுத் திரி’ தீபமேற்றி வழிபடுவது நடைமுறை. குண்டடத்தில் கால பைரவர் தோன்றுவதற்கு, மிளகு வணிகர்கள் ஒரு காரணமாக இருந்தமையால், சாதாரண தீபத் திரிகளைவிட, இங்கு மிளகுத் திரி தீபமேற்றி வழிபடுவதன்மூலம் பைரவரின் பூரண அருளை நாம் பெறலாம்.
இன்றைய நவீன உலகத்தில் பெண்ணின் கருவறையில் உருவாகும் குழந்தை எப்படியிருக்கிறது என்பதைக் காண, மருத்துவ உலகில் பல சாதனங்கள் வந்துவிட்டன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு மருத்துவத் தொழில்நுட்பமும் இல்லாத அன்றைய காலத்திலேயே, கருவில் இருக்கும் குழந்தை இப்படித்தான் இருக்கும், அதன் வளர்ச்சி இவ்வாறுதான் இருக்கும் என்பதை இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஒரு தூணில் சிற்பங்களாகவே செதுக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்; வியக்கவைக்கும் சிற்ப அற்புதம் இது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை குண்டடம் சென்று ஈசனையும் காலபைரவரையும் வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.