India
oi-Nantha Kumar R
ஜெய்ப்பூர்: காணாமல் போன பொருளை சாட் ஜிபிடி உதவியுடன் கண்டுபிடித்ததாக கூறினால் அது சாத்தியமில்லை இனி யாரும் கூற முடியாது. ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் காணாமல் போன காலணியை ஒருவர் சாட் ஜிபிடி உதவியுடன் கண்டுபிடித்துள்ளார். இது எப்படி சாத்தியமானது? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

கோவாவை சேர்ந்தவர் சுபாங்க் போர்க்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகல் கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்றார். கோவிலுக்கு செல்லும்போது அவர் தனது காலணியை வாயிலில் அதற்கான இடத்தில் கழற்றிவிட்டு உள்ளே சென்றார்.
கோவிலில் தரிசனத்தை முடித்து வெளியே வந்த சுபாங்க் போர்க்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காலணி கழற்றி போட்ட இடத்தில் அதிகமான செருப்புகள் குவிந்து கிடந்தன.
கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்ததாலும், அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் காலணிகளை கழற்றி போட்டுவிட்டு சென்றதாலும் மலை போல் செருப்புகள் குவிந்து கிடந்தன. இந்த காலணி குவியலில் தனது காலணி எங்கு இருக்கிறது என்பதை சுபாங்க் போர்க்கரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் உடனடியாக ‘சாட்ஜிபிடி’யின் உதவியை நாடினார்.
செல்போனை எடுத்து ‘சாட்ஜிபிடி’ செயலியை திறந்தார். அதில் அவர் தனது காலணியின் போட்டோவை பதிவிட்டார். அதோடு, ”நான் உஜ்ஜைன் மகாகல் கோவிலுக்கு வந்தேன். எனது செருப்பை காணவில்லை. இங்கு குவிந்து கிடக்கும் காலணிகளின் போட்டோவை உனக்கு அனுப்புகிறேன். அதில் என்னுடைய காலணி எங்கிருக்கிறது? என்பதை கண்டுபிடித்து கொடுக்க முடியுமா? இந்த பதிவில் எனது காலணியின் போட்டோவை இணைத்துள்ளேன். முடிந்தால் எனது காலணியை கண்டுபிடித்து கொடு” என்று ஆங்கிலத்தில் ‘ப்ராம்ட்’ கொடுத்தார்.
அதோடு காலணிகள் குவிந்து கிடந்த இடத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதையடுத்து ‘சாட்ஜிபிடி’ தனது பணியை தொடங்கியது. சுபோங் போர்க்கர் பதிவிட்ட தனது காலணியை அவர் பதிவிட்ட வீடியோவில் தேடியது. சில வினாடிகளுக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு ரேக்கை குறி அதன் அடியில் காலணி இருப்பதாக தெரிவித்தது. அங்கு சென்று சுபோங் போர்க்கர் பார்த்தபோது ‘சாட்ஜிபிடி’ கூறியதுபோலவே அவரது காலணி இருந்தது. இதனால் அவர் ஹேப்பியானார்.
இதுதொடர்பான விஷயத்தை சுபோங் போர்க்கர் தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”சாட்ஜிபிடி உதவியுடன் தொலைந்துபோன எனது காலணியை கண்டுபிடித்தேன்” என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.