Business
oi-Velmurugan P
டெல்லி: நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் பரவி வருகிறது. இதனால் ஆலைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை எட்ட, அரசு சர்க்கரை ஆலைகளை நேரடியாகக் கரும்பு சாறு மற்றும் பாகை மூலம் எத்தனால் தயாரிக்க ஊக்குவித்து வரும் நிலையில், சர்க்கரையாக மாற்றப்பட வேண்டிய கரும்பின் அளவு குறைந்துள்ளதாகவும், நேரடி சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் சர்க்கரை தட்டுப்பாடுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்த தகவல்கள் பரவி வருகிறது. இதையடுத்து விலை உயர்ந்து மக்களை பாதித்துவிடக்கூடாது என்று உறுதியாக உள்ள மத்திய அரசு, ஆகஸ்ட் 1 முதல் 14 வரை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அதிகாரிகளை சர்க்கரை ஆலைகளுக்கு ேேரில் செல்ல உத்தரவிட்டுள்ளது. நேரடியாக ஆய்வு செய்து சர்க்கரை இருப்பு விவரங்களை அறியுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையை முறைகேடாகப் பதுக்கி வைத்திருக்கிறார்களா அல்லது தட்டுப்பாடு உண்மையிலேயே உற்பத்திக் குறைவால் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போயிருக்கிறது. இதனால் கரும்பு அதிகம் விளையும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் போதிய மழை இல்லை. இதனால் கரும்பு சாகுபடி மற்றும் மகசூல் குறைந்திருக்கிறது. தென்மேற்கு பருவ மழை கைகொடுக்காத காரணத்தால் சர்க்கரை உற்பத்தியும் இந்த ஆண்டு பெரும் சரிவு வரலாம் என்ற அச்சமும் இருக்கிறது.
இது ஒருபுறம் எனில், வர உள்ள பண்டிகைக் காலங்களில் சர்க்கரையின் தேவை அதிமாக இருக்கும் எனவே, உள்நாட்டுச் சந்தையில் விலையேற்றம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே மத்திய அரசு தட்டுப்பாட்டைத் தடுக்க ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஏற்கனவே ஈரான் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் வளைகுடா போர் காரணமாக உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்று கருதி, கடந்த மே மாதம் முதல் வரும் செப்டம்பர் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடையும் மத்திய அரசு விதித்துள்ளது.
இது ஒரு புறம் எனில், எத்தனால் உற்பத்தி அதிகரிப்பு சர்க்கரை இருப்பைக் குறைந்துள்ளாகவும் கூறப்படுகிறது. எனினும் எத்தனால் மட்டுமே காரணமல்ல என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஒரு பொருளுக்கு டிமாண்ட் அதிகரிக்க போகிறது என்பதை சில பெரிய வியாபாரிகள் அறிந்தால், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் விலை கடுமையாக உயரும். அதனை வைத்து அவர்கள் லாபம் பார்ப்பார்கள். அந்த வகையில், செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்றே அச்சம் நிலவுகிறது. எனவே தான் இதனை தடுக்கவு சர்க்கரை ஆலைகளில் உண்மையான கையிருப்பு நிலவரத்தை அறிய விரும்பும் மத்திய அரசு , அதற்காக தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

