இன்று காலை நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், “நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்.” எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இது தொடர்பாக விவாதம் எழுந்தது. இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“சட்டமன்றத்தில் உயர்கல்வித் துறை தொடர்பான விவாதத்தின் போது, நிதியமைச்சர் திடீரெனச் சம்பந்தமில்லாமல் `நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி, எவிடன்ஸ் என்னிடம் உள்ளது” எனக் கூறி என் மீது அவதூறு பரப்பியிருக்கிறார்.

பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும், சட்டமன்றத்தின் உள்ளே பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் சுமத்தியது மிகப்பெரிய தவறு. அதையும் கடந்து `லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி’ என்று கூறிய அமைச்சரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக அழைத்து விசாரணை நடத்த வேண்டும். லஞ்சம் வாங்குவது எப்படி குற்றமோ கொடுப்பதும் குற்றம்தானே…