இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட, சக வீரர் கஸ் அட்கின்சனுடன் லண்டனில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றபோது ஏற்பட்ட தகராறால், அவரது கேப்டன் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) நள்ளிரவு விதியை மீறி இருவரும் செயல்பட்டதால், வாரியம் இதுகுறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நடந்தது என்ன?
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிகளின்படி, வீரர்கள் நள்ளிரவுக்குப் பிறகு வெளியே இருக்கக் கூடாது. ஆனால், இந்த விதியை மீறி ஸ்டோக்ஸும், அட்கின்சனும் செல்சீயில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றுள்ளனர். அங்கு, இங்கிலாந்தின் முன்னணி ரக்பி கிளப்பான “Saracens’ அணியின் அகாடமி வீரர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.
டெலிகிராப் பத்திரிகை அறிக்கையின்படி, அந்த ரக்பி வீரர் அட்கின்சனைத் தாக்க முயன்றபோது, அது தவறுதலாக வீரர்களுடன் இருந்த ECB பாதுகாப்பு அதிகாரியின் மீது பட்டுள்ளது. இதில் காயமடைந்த அந்த அதிகாரிக்கு மருத்துவமனையில் தையல் போடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சனுக்கு இந்தச் சம்பவத்தில் எந்தக் காயமும் ஏற்படவில்லை.