தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய திரையரங்குகளில் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் காட்சிக்காக கரூர் திண்ணாப்பா திரையரங்குக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், திரையில் விஜய்யின் டைட்டில் கார்டு ஒளிபரப்பு செய்யும் பொழுது, கண்ணீர் விட்டு அழுதார்.
அதேபோல், திரையரங்கில் திரைப்படம் பார்த்தபோது, ஒவ்வொரு காட்சிக்கும் விஜய் ரசிகர்கள் கைத்தட்டி கூச்சல் எழுப்பி, விசில் அடித்து காட்சிக்குக் காட்சி வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, திரைப்படத்தில் அவர் பேசும் அரசியல் வசனங்களுக்கு ஆரவாரம் செய்தனர்.
திரைப்படத்தின் இறுதிக் காட்சி முடிந்ததும், திரையரங்குக்குள் ரசிகர்கள் பலர் கண்ணீர் விட்டு, அழுதபடியே திரையரங்கையை விட்டு வெளியேறினர்.
அப்போது பேசிய ரசிகர்கள், “பல்வேறு தடைகளைக் கடந்து வெளியாகி உள்ள ஜன நாயகம் திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாகவே வெளியாகி இருக்க வேண்டும். இருப்பினும் தற்போது வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக ஜனநாயகம் திரைப்படம் உள்ளது. இனி, தமிழ் சினிமாவில் இதுபோன்று ஒரு நடிகர் உருவாகப் போவதில்லை. ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்து சிலர் திருந்த வேண்டும். இல்லையென்றால் விஜய் திருத்துவார். சாதி, மத அரசியலுக்கு எதிராக, மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை திரைப்படம் மூலம் தமிழக முதலமைச்சர் விஜய் பேசி இருக்கிறார்.
விஜய்யை இனி திரையில் பாக்காவிட்டாலும் இனி நிஜத்தில் தினந்தோறும், தொலைக்காட்சி மூலமும் அவர் செய்யும் செயல்களை செய்திகளாகப் பார்க்க இருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமாக திரைப்படத்தைப் பார்க்கவில்லை. அவர், தினம் தினம் மக்களுக்குச் சேவை செய்ய அரசியலுக்கு வந்துள்ளார்.
இப்போது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகவும் பதவியில் உள்ளார். இன்னும் அதிகமாக தமிழக மக்களுக்கு நல்லது செய்ய உள்ளார்” என்று சொன்னார்கள்.