டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், “நாம் எதுவுமே செய்யவில்லையா?” என்று இயக்குநர் வெற்றிமாறன் கேட்ட கேள்வி மற்றும் நடிகை ரேவதியின் ஆதங்கம் ஆகியவையே முக்கிய உந்துதலாக அமைந்தது.

“சிஜேபி’ (CJB) அமைப்பும், அதன் போராட்ட வடிவமும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும். தொடக்கத்தில், அம்பேத்கர் படத்தையும் ‘ஜெய் பீம்’ முழக்கத்தையும் ஏந்திப் போராடிய அந்த இளைஞரைப் பார்க்கும்போது, சமூகத்தின் சாதியப் பார்வைகளால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது.
ஆனால், சாதி, மத எல்லைகளைக் கடந்து இந்திய அளவிலான ஏராளமான இளைஞர்கள் இன்று அந்த அமைப்பின் பின்னால் திரண்டு போராடுவதைப் பார்க்கும்போது பெரும் நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க்கையில் முதல்முறையாக, இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு நானும் ஒரு ‘இந்தியன்’ என்ற உணர்வைப் பெறுகிறேன்.