
ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கிற வரை அவன் வாழும் காலத்தை எல்லாம் கணக்கில் கொண்டு, ஒருவர் எந்த வயதில் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கிறார், அதற்காக எவ்வளவு காலத்தையும் உழைப்பையும் செலவு செய்கிறார் என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பதுதான் காலக் கணக்கீடு.
உதாரணமாக, ஒரு மனிதனின் ஆயுள் காலம் 80 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். காரணம், இன்றைக்கு நம்மில் 80% பேர் 80 வயதுக்கு மேல் வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த 80 ஆண்டுகளை 8 பத்து ஆண்டுகளாகப் பிரித்துக்கொள்வோம்.
இந்த 8 பத்து ஆண்டுகளில் முதல் 20 ஆண்டுகள் ஒரு மனிதன் குழந்தையில் இருந்து பெரியவனாக வளர்வதற்கும், பள்ளி, கல்லூரியில் படிப்பதற்கும் செலவு செய்கிறான். ஓர் ஆண்டுக்கு 365 நாள்கள் எனில், முதல் 20 ஆண்டுகளில் அதாவது, முதல் 7300 நாள்களைத் தன்னை வளர்த்துக்கொள்ளவே காலம் போய்விடுகிறது. ஒரு மனிதன் பெரும் பணக்காரர் ஆக இந்தக் காலத்தில் முக்கியமான எந்த விஷயத்தையும் நம்மில் பலர் செய்வதில்லை.
இதே போல, 61 வயது முதல் 80 வயது வரையிலான காலம் ஓய்வுக் காலம். ஒரு மனிதன் சேர்த்துவைத்த பணத்தைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து, சிறப்பாக செயல்பட்டு, அதைப் பெருக்கிக் கொள்வதற்கான காலம் இது. இந்தக் காலத்தில் புதிதாக பணத்தை சேர்ப்பதைவிட, சேர்த்த பணத்தை சரியாக நிர்வாகம் செய்து, அதன் மதிப்பைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலமே ஒருவர் பெரும் பணக்காரர் ஆகமுடியும். இந்தக் காலத்திலும் ஒருவர் சிறு தவறு செய்தாலும், பெரிய அளவில் பணத்தின் மதிப்பை இழக்க வேண்டியிருக்கும். எனவே, 7300 நாள்களையும் ஒருவர் பெரிய அளவில் கணக்கில் கொள்ள முடியாது.