மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி ஒரு வாரமாக அவரது உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 11 நாட்களாக மாணவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தை நடத்திவருகின்றனர். மாணவன் தமிழ்செல்வனின் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்தபோது ஆட்சியர் அலுவலக நுழைவாசலில் ஏறி குதித்து ஓடிச்சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியவாறு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும் என கூறி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் கலைந்து செல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர்.

கைது நடவடிக்கையின்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்த போது தலை முடியை பிடித்து இழுத்து கைது செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்யும்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதிலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது மாணவர் சங்க நிர்வாகிக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறி காவல்துறையிடம் சொன்னபோதும் அவரை பேருந்தில் இருந்து இறக்கி விட மறுத்த நிலையில் மீண்டும் காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அந்த மாணவரை கீழே இறக்கிவிட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்

கைது நடவடிக்கையின் போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என இரு தரப்பினருக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது.
போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நுழைவாயில் அடைக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.