இயக்குநர் பாரதிராஜா முதலில் சுகாதாரத்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நடிப்பின் மீது பேரார்வம் கொண்டிருந்தவர் தொடர்ந்து நாடகங்களைப் போட்டிருக்கிறார். அதிலும் அவரே நடித்திருக்கிறார்.
இப்படி நாடகத்திற்காகப் பல்வேறு இடங்களுக்குப் பயணித்துக் கொண்டிருந்தவருக்கு இளையராஜாவுடன் நட்பு கிடைத்தது. இளையராஜா மற்றும் அவருடைய சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் என அனைவரும் சினிமா கனவை நோக்கித்தான் ஒன்றாகச் சுற்றி வந்தார்களாம்.
சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு பாரதிராஜா இயக்கிய நாடகங்களுக்கு இளையராஜாவே இசையமைத்திருக்கிறார். இதன் பிறகு, சுகாதாரத்துறை பணியை விட்டுவிட்டு மெட்ராஸூக்கு வந்தார் இயக்குநர் பாரதிராஜா.
ஒரு பக்கம் நடிப்பிற்கான முயற்சிகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டே, ஒரு பெட்ரோல் பங்கிலும் வேலை பார்த்து வந்திருக்கிறார். இதன் பிறகு அண்ணன் தம்பியோடு மெட்ராஸுக்கு வந்த இளையராஜா, பாரதிராஜாவுடன் அவருடைய அறையிலேயே தங்கினார்.

இதற்கிடையில் இளையராஜா, இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷிடம் கிடார் வாசிப்பாளராகச் சேர்ந்திருக்கிறார். ஒரு நாள் எதேச்சையாக, கன்னட மொழியில் “பெல்லி மோடா’ என்கிற படத்தைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.
அந்தப் படத்தினால் ஈர்க்கப்பட்டவர், உதவி இயக்குநராகச் சேர்ந்தால் புட்டண்ண கனகலிடம் (பெல்லி மோடா படத்தின் இயக்குநர்)தான் சேர வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இந்த ஆசையை இளையராஜாவிடமும் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.