புது கொள்ளு பேத்தியை பார்த்ததுமே கலங்கிய ராமதாஸ்! தைலாபுரத்தில் நடந்தது என்ன? சவுமியா கண்ணீர்! | Anbumani Ramadoss Receives Parents’ Blessings on Dr. Ramadoss’ 61st Wedding Anniversary

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

திண்டிவனம்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 61ஆவது திருமண நாளில் கலந்து கொண்டு பெற்றோரிடம் ஆசி பெற்ற அன்புமணி ராமதாஸ், இனி எல்லாம் நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார்.

ராமதாஸின் 61ஆவது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க மனைவி சவுமியா, 3 மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி காலை வந்திருந்தார்.

anbumani ramadoss pmk

வீட்டுக்குள் நுழைந்ததுமே ராமதாஸை பார்த்த அன்புமணி, உணர்ச்சிமிகுதியால் அவரை ஆரத்தழுவிக் கொண்டார். ராமதாஸும் அன்புமணியை வாஞ்சையோடு வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

அப்போது ஆனந்த கண்ணீர் வடித்தனர். அது போல் சவுமியாவும் கண் கலங்கினார். இதையடுத்து இருவரும் ராமதாஸ்- சரஸ்வதி அம்மாளின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். கொள்ளு பேரன், பேத்திகளையும் தனது தந்தையிடம் காட்டி ஆசி பெற்றார் அன்புமணி.

தனது தாய், தந்தையுடன் இரண்டரை மணி நேரம் பேசினார். இதையடுத்து தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அன்புமணி புறப்பட்ட போது செய்தியாளர்களை பார்த்ததும் அவர்களை சந்தித்தார். அப்போது அவர், பெற்றோரின் 61ஆவது திருமண நாளையொட்டி அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்றார்.

அப்போது அவரிடம் மேலும் சில கேள்விகளை கேட்க செய்தியாளர்கள் முற்பட்ட போது, அன்புமணி அதை தவிர்த்துவிட்டு காரில் ஏறி சென்றார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ராமதாஸ்- அன்புமணி இடையே நீடித்து வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் பாமக மீண்டும் ஒன்றுபட்டு செயல்பட வாய்ப்பிருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலின் போது பாமக வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணியின் மகள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அப்போது சங்கமித்ரா பேசுகையில், எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தையை அய்யா (ராமதாஸ்) வந்து பார்க்கவில்லை. போனில் கூட நலம் விசாரிக்கவில்லை. இந்த ஜி.கே.மணிதான் எங்கள் குடும்பத்தை பிரித்துவிட்டார். துரோகி” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதை கிளிசரின் போட்டு அழதது என ராமதாஸ் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அந்த குழந்தையை கொண்டு போய் ராமதாஸிடம் காட்டி ஆசி பெற்றார் அன்புமணியின் மகள்.

முக்கிய கேள்விகள்

  • இனி பாமக ஒன்றாக செயல்படும் என்றால் தலைவர் பதவியை ராமதாஸும் அன்புமணியும் விட்டுக் கொடுப்பார்களா?
  • அது போல் செயல் தலைவராக இருக்கும் காந்திமதியின் நிலை என்னவாகும்?
  • ஜி.கே.மணி கட்சியில் நீடிப்பாரா?
  • காந்திமதி தனது தம்பி அன்புமணியுடன் உறவு பாராட்டுவாரா?
  • சட்டசபை தேர்தலில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஏன் தந்தையும் மகனும் சேர்ந்துள்ளனர்

உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

கடந்த காலங்களில் தனது பிறந்தநாள், திருமண நாளின் போதும் தாய், தந்தையரின் பிறந்தநாள், திருமண நாளின் போதும் அன்புமணி தாயை மட்டும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ராமதாஸ் வீட்டில் இருந்தாலும் அவரது அறைக்குச் சென்று பார்க்காமலேயே இருந்தார் அன்புமணி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *