எனது தனிப்பட்ட எல்லை மீறப்பட்டதாகவே நான் உணர்ந்தேன். நான் அணிந்திருந்த ஆடையால் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை, ஆனால் அங்கு இருந்தவர்களின் தவறான செயல்களால்தான் நான் சங்கடப்பட்டேன் என்பதை இணையத்தில் விமர்சித்தவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்.
“சங்கடமாக இருந்தால் ஏன் அப்படி ஒரு ஆடையை அணிய வேண்டும்?’ என்று பலர் என்னைக் கேள்வி கேட்டிருந்தனர். ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா? நம்முடைய நடத்தையில் கலாசாரம் இல்லையா?

பெண்களைப் பற்றித் தவறான கருத்துகளைப் பேசுபவர்களைக் கண்டிக்க இங்கு யாருமில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்கள் ஆடையிலும் தோற்றத்திலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆரம்பத்தில், இந்த விமர்சனங்களை நான் சிரித்துக் கடந்துவிட்டேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இது பெரிய விவாதமாக மாறியது எனக்கு அதிர்ச்சியளித்தது.
நாட்டின் ஜிடிபி வளர்ச்சியைப் பற்றியோ, முதியோர் இல்லங்களில் கைவிடப்படும் பெற்றோரைப் பற்றியோ பேசுவதற்கு இங்கு யாருக்கும் நேரமில்லை. ஆனால், ஒரு பெண்ணின் ஆடையைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் அனைவருக்கும் நேரம் இருக்கிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.