கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இன்று கேளிக்கை பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். அந்த ராட்டினத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அந்தச் சமயத்தில் திடீரென ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
ராட்டினத்தின் அடிப்பகுதியில் உள்ள வெல்டிங் இணைப்புகள் துருபிடித்த நிலையில் உறுதியிழந்து இருந்ததால் அது முறிந்து விழுந்துள்ளதாகத் தெரியவந்தது. ராட்டினம் உடைந்துவிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இருந்தது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பெண்கள் 3 குழந்தைகள் என 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்த மனோரதி (54), சீமணி (49), மாலினி (49), ஷியாம் டேனியல் (14) மற்றும் ரோஸ் (16) எனவும், அவர்கள் ஒரே குடும்ப உறுப்பினர்கள் எனத் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹேப்பிலேண்ட் விபத்து தொடர்பாக வெஞ்ஞாறமூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.