
சட்டசபை தேர்தலுக்கு பின், கட்சி கட்டுப்பாட்டை மீறி, த.வெ.க., அரசுக்கு வேலுமணி தலைமையில், 25 அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்தனர். அவர்களின் கட்சி பதவிகளை பொதுச்செயலர் பழனிசாமி பறித்தார். அவர்கள், மீண்டும் இணைந்த பின்னரும், பறிக்கப்பட்ட மாவட்ட செயலர் பதவிகளை யாருக்கும் மீண்டும் தரவில்லை.
வேலுமணிக்கும் மீண்டும் மாவட்ட செயலர் பதவி அளிக்காமல், கட்சியின் துணை பொதுசெயலர் பதவியை மட்டும் பழனிசாமி வழங்கினார். இந்நிலையில், தன் சொந்த தொகுதியான, கோவை மாவட்டம் தொண்டாமுத்துாரில் உள்ள புதுப்பாளையத்தில் , நேற்று வேலுமணி, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க., கொடி, பேனர் மற்றும் அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி படம் என எதுவுமில்லை. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மட்டும் இருந்தன. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், நிருபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. கூட்டத்தில், அ.தி.மு.க., கொடி, பேனர், பழனிசாமி படம் இல்லாதது குறித்து வேலுமணியிடம் கேட்டபோது, ”எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள் கூட்ட மேடையில் உள்ளன,” என பதிலளித்தார்.
ஆனால் வேலுமணி தனக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி, ஆதரவாளர்களுக்கு மீண்டும் அதே பதவி வழங்க வேண்டும் என எடப்பாடியிடும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் வேலுமணிக்கு மட்டும் பதவி கொடுத்துவிட்டு, அவரது ஆதரவாளர்களை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. இதனால் வேலுமணி, எடப்பாடி இடையே மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.