மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஆந்திராவை அலறவிடும் பாதிப்பு! 4 பேர் உயிரிழந்ததால் திக்திக் | Andhra Pradesh Reports 12 Corona Cases, 4 Deaths In Less Than A Month; Health Department On Alert

Spread the love

India

oi-Vigneshkumar

அமராவதி: கொரோனா பாதிப்பு எந்தளவுக்கு நம்மை படுத்தி எடுத்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இதற்கிடையே இப்போது மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில நாட்களில் மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2020 இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளுமே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு பல ஆண்டுகள் ஆனது.

Corona Corona virus Andhra Pradesh Corona virus in Andhra

ஆந்திரா கொரோனா பாதிப்பு

இதற்கிடையே ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவி வருகிறது. கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான நாட்களில் மட்டும் ஆந்திராவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதில் கடுமையான பாதிப்பு மற்றும் ஏற்கனவே கடுமையான உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உயிரிழந்த நால்வருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட கடுமையான இணை நோய்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் மூவர் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடப்பா

முதலில் ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் கடந்த ஜூன் 26ம் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து ஜூலை 1 முதல் 16 வரை மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் இருவர், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

மாவட்ட வாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக கடப்பா மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. குண்டூரில் 2 பேரும், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த பாதிப்புகள் அனைத்தும் ஒரே பகுதியில் பதிவாகவில்லை. வெவ்வேறு மண்டலங்களில் தனித்தனியாக கண்டறியப்பட்டவை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் எவ்வளவு பாதிப்பு

ஜூன் 26 முதல் ஜூலை 15 வரை மாநிலத்தில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12வது பாதிப்பு தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 339 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 64, மகாராஷ்டிராவில் 43, தமிழ்நாட்டில் 39, அந்தமான்-நிக்கோபார் மற்றும் டெல்லியில் தலா 18, ராஜஸ்தானில் 12 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவர்கள்

இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவால் முன்பு போல தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படாது. இது வழக்கமான சளி அல்லது காய்ச்சலை போலவே இருக்கும் என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வது, சளி காய்ச்சல் இருந்தால் தானாக முன்வந்து தனிமைப்படுத்தி கொள்வது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்டவற்றை செய்தாலே பாதுகாப்பாக இருக்க முடியும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *