Tamilnadu
oi-Vignesh Selvaraj
திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்தியபாமா, அடுத்த சில நாட்களில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இதில் தவெக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா, திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்கி உள்ளனர்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஏற்கனவே ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்தியபாமா, அடுத்த சில நாட்களில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடுகிறார். ஏப்ரல் மாதம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சத்தியபாமா, தற்போது விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
தேர்தல் பணிமனையிலிருந்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், எம்.எல்.ஏ கமலி, மற்றும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றி வேட்பாளர் சத்தியபாமா. வெற்றி வாகை சூட சத்தியபாமா போட்டியிடுகிறார். திமுக அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்கும் என்ற நிலை வந்த போது தனது பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைத்தார்.
வாக்கு சேகரிக்க அமைச்சர்கள் வந்துள்ளார்கள். இந்திய நாட்டின் வரலாற்றில் விசில் சின்னம் வரலாறு படைத்தது. இடைத்தேர்தல் வெற்றி வரலாறு படைப்பதாக அமையும். மேலும் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர் வருவார். முதலமைச்சர் வாக்கு சேகரிக்க இங்கு வருவார்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா, 4 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அவரது கணவர் மணிவாசகமும் மனு தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப்டம்பர் 17) நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19 கடைசி நாள். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
