மும்பையின் தென்பகுதியில், மலபார் ஹில் அருகே, உயர்தரமான புலேபாய் தேசாய் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்தப் பரந்த கிளப், இன்றும் மிகவும் விரும்பப்படும் ஒன்றாகத் திகழ்கிறது.
இது நீச்சல் குளம், நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், டென்னிஸ் மைதானங்கள் மற்றும் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள உயர்தர உணவகங்களைக் கொண்டுள்ளது. இதன் புகழ்பெற்ற வெளிப்புறக் குளம், ஆங்கிலேயர் ஆட்சியில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக, இந்தியர்கள் அந்தக் கிளப்பின் வாசல் அருகில் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை. கறுப்பு தோலுடன் இருந்த ஐரோப்பியர்கள் கூட வாயில்களில் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் பாஸ்போர்ட்டைக் காட்டும்படி கேட்டனர்.
1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, கிளப் தனது “வெள்ளையர்களுக்கு மட்டுமே” என்ற கொள்கையை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வந்தது. 1960-களில், ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தூதர் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் ஏற்பட்ட சர்வதேச அளவிலான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த கிளப் இறுதியாக ஐரோப்பியரல்லாதவர்களுக்கும் தனது கதவுகளைத் திறந்தது. ஆனால் இப்போதும் ஐரோப்பியர்கள் மட்டும்தான் உள்ளே சுதந்திரமாக அனைத்து சலுகைகளையும் பெற முடியும்.

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சமூக ஊடகத்தில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து வெளியிட்டு இருந்த ஒரு பழைய பதிவு வைரலானது. அதில் 1960களில்தான் அந்தக் கிளப்பிற்கு சென்றபோது விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “1960-களின் நடுப்பகுதியில், பம்பாயில் உள்ள “பிரீச் கேண்டி கிளப்’பில் இருந்து நானே வெளியேற்றப்பட்டேன்; அப்போது, ’வெள்ளையர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்ற விதியை மீறி, ஒரு இந்திய நண்பரைத் தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று எனது அமெரிக்க வகுப்புத் தோழர் ஒருவர் நம்பியிருந்தார். சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகான இந்தியா அது,” என்று தரூர் எழுதியுள்ளார்.