India
oi-Vigneshkumar
லக்னோ: கப்பலில் வேலை என்று வெளிநாட்டிற்குச் சென்ற இந்திய மாலுமியின் மரணம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவரது உடலில் இருந்த அனைத்து பாகங்களும் அகற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெனிசுலா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் உடல் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சற்றே ஆறுதல் அடைந்தனர். இருப்பினும், அது நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை.

குற்றச்சாட்டு
33 வயதான ராகேஷின் உடலில் மூளை, இதயம், நுரையீரல் உள்ளிட்ட எந்தவொரு முக்கிய உள் உறுப்புகளும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள லாக்டா பஜார் தோலா பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் சவுகான். 33 வயதான இவர் 2025 மாதம் எக்ஸ்பினிட்டி என்ற தனியார் நிறுவனம் மூலம் வணிகக் கப்பல் ஒன்றில் மாலுமியாக வேலைக்கு சேர்ந்தார். தனது பணிக்காக இவர் வெனிசுலா நாட்டிற்குச் சென்றுள்ளார். தொடக்கத்தில் எல்லாம் நன்றாகவே போய் கொண்டு இருந்தது. ஆனால், கடந்த மே மாதம் ராகேஷ் கப்பலில் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
என்ன நடந்தது!
கப்பல் நிறுவனமே இந்த தகவலை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். ராகேஷ் மரணம் தொடர்பாகப் பல முரண்பாடான தகவல்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதாக ராகேஷின் தந்தை ராம் தேவ் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார். தொடக்கத்தில் ராகேஷ் கப்பலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மறுநாள் காலையில், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கூறியுள்ளனர். அன்றைய தினமே மாலையில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்
மரணத்திற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, கீழே விழுந்ததால் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக நிறுவனம் கூறியது. ஆனால், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருக்கிறது. முதலில் ஒரே வாரத்தில் உடலை வழங்குவதாக சொல்லியுள்ளனர். ஆனால், ஒரு மாதத்திற்கு பிறகே ஜூன் 4ஆம் தேதி ராகேஷின் உடல் அவரது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
சொந்த ஊருக்கு ராகேஷ் உடல் எடுத்து வரப்பட்ட பிறகு போலீசார் மருத்துவர்கள் குழு உடலை ஆய்வு செய்தனர்.. முதற்கட்ட சோதனையிலேயே ஏற்கனவே உடற்கூறாய்வு செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய முடியாது என மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இரண்டாவது உடற்கூறாய்வு நடத்தப்பட்ட போது தான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன.
அதாவது ராகேஷின் உடலில் கழுத்தில் இருந்து இடுப்புப் பகுதி வரை 22 தையல்களும், இடது காது முதல் வலது காது வரை தலையின் பின்புற பகுதியில் 21 தையல்களும் போடப்பட்டிருந்தன. ராகேஷின் உடலுக்குள் ஒரு முக்கிய உறுப்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. மூளை, இதயம், இரண்டு நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், மண்ணீரல், கணையம், வயிறு, குடல் பகுதிகள், தைராய்டு மற்றும் குரல்வளை உள்ளிட்ட அனைத்தும் உடலில் இருந்து அகற்றப்பட்டு உடல் முழுவதும் காலியாக இருந்தது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது.
கண்டுபிடிக்க முடியவில்லை
பொதுவாக ஒரு மரணத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறியவே உடற்கூறாய்வு செய்யப்படும். அப்போது மருத்துவப் பரிசோதனைகளுக்காக இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகம் போன்ற சில உறுப்புகள் அல்லது அவற்றின் திசுக்களை எடுப்பது வழக்கமான விஷயமாகும். ஆனால் ராகேஷ் சவுகானின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் முழுமையாக அகற்றியுள்ளனர். மேலும், அது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் வழங்கவில்லை. இது மிக பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. உடலில் எந்தவொரு உறுப்புகளும் இல்லாததால் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியாது போனது.
கோரிக்கை
இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய மாலுமிகள் சங்கம், வெளிநாடுகளில் இந்தியர்கள் பலிகடாக்களாக மாற்றப்படுவதாகவும் கவலையைத் தெரிவித்துள்ளது. வெனிசுலாவுக்கான இந்தியத் தூதரகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, முழுமையான உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் இறப்புக்கான உண்மையான காரணத்தை தெளிவுபடுத்தும் ஆவணங்களை வெனிசுலா அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராகேஷின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடும், நீதியும் கிடைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

