Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளராக வரும் நபர், ஏற்கனவே தோனியுடன் பணியாற்றியவர் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மைக் ஹசி அல்லது மெக்கல்லமாக இருக்கக் கூடும் என்றும் விவாதம் கிளம்பி இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளமிங் பதவி விலகினார். 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியுடன் பயணித்த வந்த பிளமிங் தற்போது, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி 2 மாதங்களாகவே விவாதமாகி இருக்கிறது.

கடந்த மாதம் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசும் போது, சிஎஸ்கே அணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர்தான் நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். இதனால் மைக் ஹசி, இயன் மோர்கன், பிரண்டன் மெக்கல்லம், ஆடம் வோஜஸ் என்ற பெயர்கள் பயிற்சியாளர்கள் பரிந்துரையில் அடிபட்டன.
இருப்பினும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தொடர்ந்து சைலண்ட் மோடில் இருந்து வருகிறது. அதேபோல் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் ருதுராஜ் கெய்க்வாட், தோனி மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர். கார்த்திக் சர்மா தொடர்ந்து சென்னையிலேயே முகாமிட்டு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தோனியுடன் ஏற்கனவே பணியாற்றியவர் தான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் புதிய பயிற்சியாளர் யாராக இருக்கும் என்ற விவாதம் மீண்டும் தொடங்கிவிட்டது.
ரசிகர்கள் மத்தியில் தோனியுடன் பணியாற்றியவர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றால் யாராக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. மெக்கல்லம், மைக் ஹசி, ஆல்பி மோர்கல் ஆகியோரின் பெயர்கள் பேசப்படுகிறது. இதில் கேரி கிர்ஸ்டன் இருந்தாலும், இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதால், அவர் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது.