ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இவர்களின் 15 வயது மகள் மாதவி, வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்று பொதுத்தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
இன்று காலை, தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவி மாதவி, சமூக அறிவியல் பாடத்தில் 27 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாததால், மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், வீட்டின் கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.

அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குடும்பத்தினர் கதவை உடைத்து, மாணவியை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி மாதவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்வு தோல்வியை மறுதேர்வு மூலமாக எழுதி சரிசெய்துவிடலாம். எனவே, எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது. மனச்சுமைகளை பகிர்ந்துகொள்ள, புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த முயல வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!
