Business
oi-Velmurugan P
சென்னை: இன்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 8-வது ஊதியக் குழு எப்போது பரிந்துரை அளிக்கும்.. அந்த பரிந்துரை எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.. அவர்களின் ஊதியம் எவ்வளவு உயரக்கூடும் என்ப முக்கிய கேள்வியாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம் எப்படி எல்லாம் மாறும் என்பது தெரியாது.. ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை ஊதியம் எப்படி எல்லாம் மாறியுள்ளது என்பதை பார்ப்போம்.
அரசு ஊழியர்கள் 8-வது ஊதியக் குழுவையும், அடுத்த ஊதிய மாற்றத்தையும் எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஊதியம் எவ்வாறு மாறியுள்ளது என்பதைத் திரும்பிப் பார்ப்போம்.

சுதந்திரத்திற்குப் பிறகு, முதல் ஊதியக் குழுவின் கீழ் மாதத்திற்கு வெறும் ரூ. 55 ஆக இருந்த குறைந்தபட்ச அடிப்படை ஊதியம், 7-வது ஊதியக் குழுவின் கீழ் ரூ. 18,000 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு ஊழியர்களின் ஊதியம் நீண்ட தூரம் பயணித்திருக்கிறது. ஒவ்வொரு ஊதியக் குழுவும் ஊழியர்களின் வருமானத் தொகையில் மட்டுமல்லாமல், அவர்களின் ஊதியக் கட்டமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இன்று நாடு தனது 80-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. கடந்த பல தசாப்தங்களாக அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று பார்ப்போம்.
அடிப்படை ஊதியம்
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, 1946-ல் முதல் ஊதியக் குழு நடைமுறைக்கு வந்துவிட்டது. அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளின்படி (www.doe.gov.in), இது அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை மாதம் ரூ. 55 ஆகவும், அதிகபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ. 2,000 ஆகவும் 1946ம் ஆண்டு இருந்தது. அதன்பின்னர் 1959-ல் நடைமுறைக்கு வந்த 2-வது ஊதியக் குழு, குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை மாதம் ரூ. 80 ஆக உயர்த்தியது. அதிகபட்ச அடிப்படை ஊதியமும் ரூ. 3,000 ஆக உயர்ந்திருந்தது.
சம்பள உயர்வு
1973-ல் 3-வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தபோது, குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ரூ. 196 ஆகவும், அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 3,500 ஆகவும் அதிகரித்தது. இந்த ஊதிய உயர்வு தொடர்பாக பாங்க் பஜார் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகையில், “சுதந்திரத்திற்குப் பிறகு அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், காலப்போக்கில் அடிப்படை ஊதியத்தின் கட்டமைப்பு மற்றும் அளவு ஆகியவை எவ்வளவு குறிப்பிடத்தக்க வகையில் மாறியுள்ளன என்பதைக் காட்டுகின்றன” என்றார்.
அடிப்படை ஊதியம் எப்படி உயர்ந்தது
அவர் மேலும் கூறுகையில், 1986-ல் நடைமுறைக்கு வந்த 4-வது ஊதியக் குழு, குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை மாதம் ரூ. 750 ஆக உயர்த்தியது. அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 8,000-ஆக உயர்ந்துள்ளது. 1996-ல் அமல்படுத்தப்பட்ட 5-வது ஊதியக் குழு, ஊதியத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தியது. இதில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ரூ. 2,550-ஆகவும், அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 26,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
6வது ஊதியக்குழு
2006-ல் நடைமுறைக்கு வந்த 6-வது ஊதியக் குழு, குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ. 7,000-ஆக உயர்த்தியது. அதேவேளையில், அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 80,000-ஆக உயர்ந்திருந்தது. பல்வேறு ஊதியக் குழுக்களின் காலக்கட்டத்தில் அடிப்படை ஊதியத்தில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, காலப்போக்கில் அரசு ஊழியர்களின் ஊதியக் கட்டமைப்பு எவ்வாறு மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது .
18000 ஆக உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம், 1-வது ஊதியக் குழுவின் கீழ் ரூ. 55-ஆக இருந்த நிலையில் இருந்து, 7-வது ஊதியக் குழுவின் கீழ் ரூ. 18,000-ஆக உயர்ந்துள்ளது. 7-வது ஊதியக் குழு புதிய ஊதியக் கட்டமைப்பைக் கொண்டு வந்தது. 2016-ல் நடைமுறைக்கு வந்த 7-வது ஊதியக் குழு, குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை மாதம் ரூ. 18,000-ஆக உயர்த்தியது. அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், 7-வது ஊதியக் குழுவின் பணி ஊதியத்தை உயர்த்துவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை; அது அரசு ஊழியர்களின் ஊதியக் கட்டமைப்பையே மாற்றியமைத்தது. முன்பிருந்த ‘ஊதியப் பட்டை’ மற்றும் ‘தர ஊதியம்’ முறைக்கு மாற்றாக ‘ஊதிய அணி’ (Pay Matrix) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தைத் தீர்மானிப்பதற்கான ஒரு புதிய கட்டமைப்பை வழங்கியது.
“பல்வேறு ஊதியக் குழுக்களின் மூலம் ஊதியக் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது; 7-வது ஊதியக் குழுவின் கீழ், பழைய ‘ஊதியப் பட்டை’ மற்றும் ‘தர ஊதியம்’ முறைக்கு மாற்றாக ‘ஊதிய அணி’ முறை கொண்டுவரப்பட்டது.
அடுத்த ஊதிய மாற்றத்திற்காகக் காத்திருக்கும் அரசு ஊழியர்களின் கவனம் தற்போது 8-வது ஊதியக் குழுவின் மீது திரும்பியுள்ளது. இருப்பினும், 8-வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் எவ்வளவு என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஊதியக் குழு தனது பரிந்துரைகளை வழங்கிய பின்னரும், அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இறுதி முடிவை எடுத்த பின்னருமே புதிய ஊதிய விவரங்கள் தெரியவரும். இந்தக் கட்டமைப்பிற்கான அடுத்தகட்ட மாற்றத்தை 8-வது ஊதியக் குழு தீர்மானிக்கும்,” இவ்வாறு ஆதில் ஷெட்டி கூறினார்.
சம்பளம் இனி எப்படி இருக்கும்
6வது ஊதியக்குழுவிலிருந்து 7வது ஊதியக்குழுவுக்கு மாறும்போது, அடிப்படைச் சம்பளத்தைக் கணக்கிட 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் கணக்கிடப்பட்டது.அதன்படியே 8வது ஊதியக்குழுவில் பயன்படுத்தப்பட்டால், அடிப்படை சம்பளம் ₹46,260 ஆக உயரும். அரசு ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ₹6,42,500 ஆக உயர்ந்துவிடும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி செய்தால் அரசு பல ஆயிரம் கோடிகளை சம்பளத்திற்காக ஒதுக்க வேண்டியதிருக்கும். மத்திய அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கணிப்புப்படி, 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.83 முதல் 2.18 வரை மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். எனினும் அடிப்படை சம்பளம் 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் படி ₹34,560 ஆக மாறலாம் என்கிறார்கள்.

