`வந்து கெஞ்சி கண்ணீர் விட்டார்; மதிப்புக்காக அடக்கி வாசிக்கிறேன்!' – செங்கோட்டையனைச் சாடிய இபிஎஸ்

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது தனிமனித தாக்குதல் என விவாதம் எழுந்திருக்கிறது.

கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ” இங்கு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர், தானாக எம்.எல்.ஏ ஆகவில்லை. அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்.எல்.ஏ ஆனார். ஆனால் சுயநலம், திமிர், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று அம்மா பாணியைக் கடைப்பிடித்தோம்.

எடப்பாடி பழனிசாமி

கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து ஒருவரைக் கூட என்னைப் பார்க்க விட மாட்டார். மோசமான குணம் படைத்தவர். பிறர் நல்ல சட்டை போட்டுக்கொண்டால் கூட பிடிக்காது, பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? சிந்து ரவிச்சந்திரனை பொட்டிகட்டி அனுப்பினார். மாவட்ட சேர்மன் ஒருவரும் இவரால் கட்சியை விட்டுப் போய்விட்டார்.

மரியாதை இல்லாத மனிதர். அனைவரது மனைவியும் புருஷன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அம்மா இருக்கும்போது அமைச்சராக இருந்தபோது செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு. நான் அப்போது கீழேதான் இருந்தேன், அம்மாவிடம் அவர்கள் பேசினார்கள்.

எடப்பாடி பழனிசாமி

படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும் அவர் பதவியை விட்டு இறக்கிவிட்டார். நகர, ஒன்றியச் செயலாளரோ, கட்சியினரோ புகார் அளிக்கவில்லை, அவரது மனைவி, மகன் புகார் அளித்தனர். அந்த புகாரைச் சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது. பிறகு என்னை அழைத்து இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பாப்போச்சு என்றார் அம்மா, இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை, இவரெல்லாம் மோசமான மனிதர் என்றார் அம்மா.

அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன், இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா? நீங்கள் முதல்வராக இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள் என்று கெஞ்சினார். ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார், இவரைப் போல எனக்கு பொய் பேச வேண்டிய அவசியமில்லை.

எடப்பாடி பழனிசாமி

நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன், அந்த மரியாதை உங்களுக்கு இருக்கிறதா? பச்சையாகப் பேச ஆரம்பித்துவிடுவேன், எனது பதவி மதிப்புக்காக அடக்கி வாசிக்கிறேன். நான் எப்படிப்பட்டவன் என்பது தெரியாது, எனது முகம் ஒரு பக்கம் தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை, நான் எதற்கும் துணிந்தவன்” என தொடர்ந்து பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *