நான் சென்ற போது பயிற்சி அலுவலக வளாகத்தில் நடிகர் விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. விஜய் மற்றும் சக நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் விஜய் அவர்களை சந்திக்க முடியவில்லை. அந்தப் படத்தில் நடித்த பிற நடிகர்களை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன் சிலர் .ஹைதராபாதில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி விசாரித்தார்கள்.
என்னுடன் பயிற்சிக்கு வந்தவர்களில் ஒரிருவரைத் தவிர அனைவருமே தெலுங்கர்கள். தமிழ் தெரியாது. அவர்களுக்கு நடிகர் விஜய்யை அவ்வளவாகத் தெரியவல்லை. விஜய் பட ஷூட்டிங்கை பார்த்த மற்றும் விஜய்யுடன் நேரில் உரையாடிய பின் நடிகர்களைப் பற்றிய என் எண்ணம் மாறியது.
இங்கு பல பட ஷூட்டங்குகளைப் பார்த்திருக்கிறேன். சில நடிகர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல அலட்டிக் கொள்வார்கள ஆனால் நம் தளபதி விஜய், மிகவும் எளிமையானவர். ஷூட்டிங் சமயம் அந்த கதாபாத்திரமாகவே மாறி முழு உழைப்பையும் தருவார். அது ஒரு காலேஜ் சீன். அனுஷ்காவுடன் குறும்பாக கலாய்க்கும் காட்சி. ஒரே டேக்கில் ஓகே ஆனது.
விஜய் தன் ஷாட் முடிந்தவுடன் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். முதல் நாள் அவருடன் நான் பேச முடியுமா என்ற தயக்கத்தில் இருந்தேன். அடுத்த நாள் இடைவேளையின் போது வெளியே வந்த விஜய்யை நானும் தமிழ் தெரிந்த ஒரு சிநேகிதியும் சந்தித்து எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம். சிறிது நேர உரையாடலுக்குப் பின் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். நம் வீட்டுப் பிள்ளையுடன் பேசுவது போல் தான் நான் அவரிடம் பேசிய போது உணர்ந்தேன்.
என் சிநேகிதி வெளி நாட்டில் வசிக்கும் தன் மகள் விஜய்யின் ரசிகை என்று கூறி அவளுடன் பேச முடியுமா எனக் கேட்டார். உடனே எந்தவொரு தயக்கமும் இன்றி அவளுடன் பேசினார். எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். பெரிய ஸ்டார். எந்தவொரு பந்தாவுமில்லாமல் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று வியந்து போனோம். ஏனென்றால் இங்கு சில நடிகர்கள் வரும் போது கெடுபிடிகள் அதிகமாக இருக்கும்
நான் படங்கள் அதிகமாக பார்ப்பது கிடையாது. பாலசந்தர், பாரதிராஜா படங்களை விரும்பி பார்ப்பேன். முதலில் நான் பார்த்த விஜய் படம் ‘போக்கிரி’ அந்த படத்தில் விஜய்யின் நடிப்பு, பாடல்கள், வசனங்கள் எல்லாமே செம மாஸ். என்னை மறுமுறை பார்க்கத் தூண்டிய படம் ‘போக்கிரி’ அவரின் குறும்புத்தனமான. யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை வசனங்களை ரசிப்பேன். ஒரு படத்தில் அவர் வடிவேலுடன் அடிக்கும் லூட்டி. அப்பப்பா!.வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..
விஜய் பட ரிலீஸின் போது ஒரு திருவிழா போலவே ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். விஜய்யின் எளிமை,பணிவு உழைப்பு தான் மக்களின் மத்தியில் நம்மில் ஒருவர் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது நிஜம்.
செல்ல பிள்ளை விஜய்க்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!
வி. ரத்தினா
ஹைதராபாத்