ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாசில்தார் அலுவலகத்தின் போர்டிகோ வாயிலில் நிறுத்திவைக்கப்பட்ட தாசில்தார் பயன்படுத்தும் `அரசு வாகனம்’ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
தீ மளமளவெனப் பரவிய பிறகே, தாசில்தார் அலுவலகத்தின் இரவுநேரக் காவலர் பார்த்திருக்கிறார். தீயை அணைக்க முடியாததால், உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சிக் காத்திருந்தது.

கார் தானாகத் தீப்பற்றி எரியவில்லை. இளைஞன் ஒருவன் முகத்தை மறைத்தபடி, காரைக் கொளுத்திவிட்டு தப்பி ஓடியிருப்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளைக்கொண்டு, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில், காருக்குத் தீ வைத்த இளைஞனை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர். அந்த இளைஞன் யார், என்னக் காரணத்துக்காக தாசில்தாரின் காருக்குத் தீ வைத்தான் என போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.