தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் சண்.இராமநாதன், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம், நா.த.க-வில் புலவர் கிருஷ்ணகுமார், த.வெ.க-வில் விஜய் சரவணன் போட்டியிட்டனர். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளர் விஜய் சரவணன் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்பார்கள். இங்கு அதிகமான முறையில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது இரண்டாவது தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவற்றை மேற்கோள் காட்டி தஞ்சாவூரை திமுக-வினர் தங்கள் கோட்டை என பெருமையுடன் சொல்லி வந்தனர்.
இந்நிலையில் எளிய பின்னணியைக் கொண்ட விஜய் சரவணன், திமுக வேட்பாளர் சண்.இராமநாதனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். பத்தாவது சுற்று எண்ணிக்கை வந்ததும் விஜய்சரவணன் அதிகமான வாக்கு வித்யாசத்தில் முன்னிலை வகிக்க, அப்செட் ஆன சண்.இராமநாதன் யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். யாரையும் ஒதுக்கியதில்லை. பலருக்கு உதவி செய்திருக்கிறேன். நலிவடைந்த நிலையில் இருக்கும் கட்சியினருக்கு மாதம் தோறும் மருந்து, மாத்திரை வாங்கிக்கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ஆனால் இப்படியொரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை என வாடிய முகத்துடன் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார்.