விண்ணில் சீறிப்பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-17.. அதிநவீன இஓஎஸ்-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் | ISRO Scripts History: GSLV-F17 Successfully Launches Advanced EOS-05 Earth Observation Satellite from Sriharikota

Spread the love

India

oi-Shyamsundar I

ஸ்ரீஹரிகோட்டா:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பூமி கண்காணிப்பு பணிகளுக்கான அதிநவீன ‘இஓஎஸ்-05’ (EOS-05) செயற்கைக்கோளை சுமந்துகொண்டு புறப்பட்ட ‘ஜிஎஸ்எல்வி எஃப்-17’ ராக்கெட்டை இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, அதிகாலை 2:55 மணி அளவில் இந்த பிரம்மாண்ட ராக்கெட் விண்ணை நோக்கிச் சீறிப்பாய்ந்தது. நள்ளிரவு வானைப் பிளந்துகொண்டு ஆர்ப்பரித்த ஜிஎஸ்எல்வி ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் திட்டமிட்ட பாதையில் சீராகப் பயணித்தது.

ISRO GSLV

துல்லியமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்

ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதில் பொருத்தப்பட்டிருந்த இஓஎஸ்-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து, திட்டமிடப்பட்ட புவி பரிமாற்ற சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை அடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட், அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-05 ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோளை துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

வரலாற்று சாதனை: அதிக எடையுள்ள செயற்கைக்கோள்

இதுகுறித்து ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநர் தாமஸ் குரியன் தெரிவிக்கையில், இது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் தருணம். ஜிஎஸ்எல்வி தனது 19-வது பயணத்தை மகத்தான வெற்றியாகப் பதிவு செய்துள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிடிஓ அல்லது சப்-ஜிடிஓ சுற்றுப்பாதையில் இதுவரை செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே அதிக எடைகொண்டது இந்த இஓஎஸ்-05 செயற்கைக்கோள் தான். விண்ணில் ராக்கெட் பறப்பது சில நிமிட நிகழ்வுதான் என்றாலும், அதன் பின்னணியில் பல மாதங்கள் மற்றும் ஆண்டுகளின் கடின உழைப்பு ஒளிந்துள்ளது, என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும், 420.5 டன் எடையும் கொண்டது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன ஏவுவாகனங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

இஓஎஸ்-05 செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்கள்

பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து, இந்திய நிலப்பரப்பை இடைவிடாது 24 மணி நேரமும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயற்கை பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு கண்காணிப்பு, வானிலை மாற்றங்கள், வேளாண்மை, காடுகள் மற்றும் நீர்நிலைகள் குறித்த நிகழ்நேரப் புகைப்படங்களையும் தரவுகளையும் வழங்கும் வல்லமை பெற்றது.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். “இந்தியா விண்வெளி துறையில் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி உலகளாவிய விண்வெளி சக்தியாக உருவெடுத்து வருகிறது. விசிபிள், இன்ஃப்ராரெட், மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் அலைவரிசைகளில் மிக விரிவான கண்காணிப்புத் திறனை வழங்கும் இந்தியாவின் முதல் புவி ஒத்திசைவு இமேஜிங் செயற்கைக்கோளாக இஓஎஸ்-05 திகழ்கிறது” என அவர் பாராட்டினார்.

அடுத்த இலக்கு: ககன்யான் மற்றும் 6 புதிய திட்டங்கள்

வெற்றிக்குப் பின்னர் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன், இந்தியாவின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஆளில்லா சோதனைப் பயணம் இந்த ஆண்டிலேயே நடத்தப்பட தீவிர பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் நடப்பு நிதியாண்டிற்குள் நேவிகேஷன் செயற்கைக்கோளான ‘என்விஎஸ்-03’ உட்பட மேலும் 6 ராக்கெட் ஏவுதல்களை நிகழ்த்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *