International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா ஈரான் போர் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அதன் பிறகே ஹார்முஸ்ல ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய போர், மாத கணக்கில் நீடித்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலையும் உச்சத்திற்குப் போனது. அதன் பிறகு இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அமைதி திரும்பியது. கப்பல் போக்குவரத்து ஹார்முஸில் மெல்ல சீரானது.

தாக்குதல்
இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீசு தாக்குதல் நடந்துள்ளன. அதுவும் ஒரே நாளில் 3 கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனை பிரிட்டன் கடல்சார் வர்த்தக பாதுகாப்பு அமைப்பான UKMTO உறுதி செய்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கப்பலின் வெளிப்புறத்தில் லேசான சேதம் ஏற்பட்டாலும், உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை. தாக்குதலுக்குப் பிறகும் கப்பல் தனது பயணத்தை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
3வது சம்பவம்
இதற்கு முன்பு தாக்கப்பட்ட இரண்டு எண்ணெய் கப்பல்களில் ஒன்று ஓமன் கடற்கரை அருகே பயணித்தபோது தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்தது. தெற்கு நோக்கி வளைகுடாவை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த அந்த கப்பலின் இடது பக்கத்தில் ஏவுகணை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு கப்பலும் தாக்குதலால் சேதமடைந்தாலும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்தி பாதுகாப்பு குறித்து புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கண்டனம்
இதற்கிடையில் தாக்கப்பட்ட கப்பல்களில் கத்தாரை சேர்ந்த ‘அல் ரெகய்யாத்’ என்ற திரவ இயற்கை எரிவாயு கப்பலும் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கத்தார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி கூறுகையில், “சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்தி பாதுகாப்புக்கு எதிரான தாக்குதல் இது. இதை ஏற்கவே முடியாது. சர்வதேச சட்டங்களை மீறும் மிகக் கடுமையான செயல்” என்று கண்டனம் தெரிவித்தார்
இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். பலமுறை எச்சரித்தும் கப்பல் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததால் தாக்குதல் நடந்ததாக ஈரான் அரசு ஊடகம் குறிப்பிட்டாலும், தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தி
கடந்த வாரம் முதல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து எண்ணெய் கப்பல்களும் ஈரான் அங்கீகரித்த கடல் பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஈரான் ராணுவம் எச்சரித்திருந்தது. மேலும், அந்த பகுதியில் அமெரிக்கா தலையிட்டால் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 அம்சங்கள் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு நிலைமை மேம்பட்டாலும் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் பயணிப்பதால்.. தொடர்ச்சியான இந்த தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகம், எண்ணெய் விநியோகத்தை கடுமையாக பாதிக்கிறது.

