வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன். இவர்கள் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் மேற்கண்ட செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக, கடந்த 22-ம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றிருந்த த.வெ.க ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை, செங்கல் சூளை உரிமையாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் மடக்கி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே கைகலப்பும் ஏற்பட்டது.

அன்றைய தினமே, த.வெ.க நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அந்தப் புகாரில், “`இப்போது டி.வி.கே ஆட்சி நடக்கிறது. இதனால், சூளை வைத்திருக்கும் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு மாமூல் தர வேண்டும். இல்லையெனில், நீங்கள் சூளை தொழில் செய்ய முடியாது’ என மிரட்டுகின்றனர். டி.வி.கே பிரமுகர்களை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தனர்.
த.வெ.க தரப்பிலும், “அந்தப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை நடக்கிறது. பர்மிட் இல்லாமலே லாரிகளில் சூளைக்கு மண் கொண்டுவருகின்றனர். திருட்டு மண் எடுக்கும்போது வீடியோ எடுத்தும், கனிவளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரி வந்தபோது, புகாருக்குள்ளான சூளைகளைக் காட்டச் சொன்னதால் அவர்களுடன் த.வெ.க நிர்வாகிகளும் உடன் சென்றார்கள்.
அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் மடக்கி எச்சரித்தார்கள். இதையடுத்து, அதிகாரிகள் சென்ற பிறகு வேண்டுமென்றே மாமூல் கேட்டுவந்ததாக த.வெ.க நிர்வாகிகள் மீது பழிசுமத்துகிறார்கள்’’ என்று விளக்கமளிக்கின்றனர்.

கனிமத் திருட்டைத் தடுத்ததால் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் த.வெ.க ஒன்றியச் செயலாளர் தரப்பினர் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து வேலூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தத் தரப்பினர் இன்றைய தினம் ஏராளமானோரைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. த.வெ.க நிர்வாகிகள் மாமூல் கேட்டுதான் வந்தார்கள்’’ எனத் திரும்பத் திரும்ப முறையிடுவதால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தைக் கலைக்கச் செய்தனர்.