International
oi-Nantha Kumar R
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந் நாட்டின் மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பியுமான ஷகிப் அல் ஹசனின் வீட்டில் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசி வீடு சூறையாடப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன். சிறந்த ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தீவிர ஆதரவாளர். அவரது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாகவும் இருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதனால் அவரது ஆட்சி கலைந்தது. ஷகிப் அல் ஹசன் தனது எம்பி பதவியை இழந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஷேக் ஹசீனா நம் நாட்டில் இருந்து வருகிறார்.
அவரை நாடு கடத்தும்படி பலமுறை வங்கதேசம் கூறினாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் அவரது கட்சி தடை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டோடு, வீடுகள் சூறையாடப்பட்டன. இதற்கிடையே தான் விரைவில் ஷேக் ஹசீனா வங்கதேசம் செல்வதாக அறிவித்துள்ளார். டிசம்பர் மாதம் அவர் இந்தியாவை விட்டுவிட்டு வங்கதேசம் செல்வதாக கூறியுள்ளார்.
ஷேக் ஹசீனாவிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்து இருந்தாலும் அவர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பும் முடிவில் உறுதியாக உள்ளார். இதற்கிடையே தான் நேற்று டெல்லியில் ‘ஃபாரின் கரஸ்பாண்டன்ட் கிளப்’ பிரஸ் கான்பரன்ஸில் ஷேக் ஹசீனா பங்கேற்றார். இந்தியா வந்த பிறகு அவரது முதல் நேரடி பத்திரிகையாளர் சந்திப்பு இதுவாகும்.
இந்த பிரஸ் கான்பரன்சில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்றார். இதற்கு வங்கதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வங்கதேசத்தை ஆளும் பிஎன்பி, ஜமாத் இ இஸ்லாமி உள்பட பல்வேறு கட்சியினர் கொந்தளித்தனர். இதற்கிடையே தான் ஷகிப் அல் ஹசனுக்கு சொந்தமான வீடு மாகுரா டனுவில் உள்ள கேஷாப்மார் என்ற இடத்தில் உள்ளது. இந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வீடு சூறையாடப்பட்டது.
இதுபற்றி வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ”வங்கதேசத்தில் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டள்ளன. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா உடனான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
அடுத்த சில மணிநேரங்களிலேயே அவரது இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டள்ளது. ஷேக் ஹசீனா பற்றிய செய்திகளை வெளியிட்டால் நீதிமன்றங்கள் வழியாக வழக்குகள் தொடரப்படும் என்று பிஎன்பி, இஸ்லாமிய ஜமாத் மற்றும் என்சிபி கட்சிகள் மிரட்டல் விடுத்தன. அவாமி லீக் கட்சி தொண்டர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் கொலை வெறி தாக்குதல், படுகொலைக்கு இது மற்றொரு சான்றாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.