தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகு, திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
“‘பாதாள சாக்கடை மூடிகள் முறையாக முறையாக இல்லாததால் விபத்து ஏற்பட்டு 40 நாள் சிகிச்சையில் இருந்தேன்’’ என மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, ‘’மாநகராட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது, குழாய்களில் ஏற்படும் உடைப்புகளால் தண்ணீர் வீணாகிறது” என்று கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2-வது வார்டு கவுன்சிலர் கணேசன் பேசுகையில், “ஆத்தூர் தடுப்பணையில் தனியார் தண்ணீர் நிறுவனம் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை எடுக்கிறார்கள். இதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தடுக்க வேண்டும். இதுவே மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணம்’’ என்றார்.
கூட்டத்திற்கு வருகை தந்த மேயரும் துணை மேயரும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை எடுத்து வந்து, தாங்கள் அமர்ந்திருந்த மேஜையின் மீது வைத்து கூட்டத்தைத் தொடங்கினர்.
முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, “தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் மற்ற மாநில முதல்வர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்? அந்த மாநிலங்களில் நம் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.