International
oi-Nantha Kumar R
தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட இந்திய வீரர், வீராங்கனைகள் உஸ்பெகிஸ்தான் சென்ற நிலையில் அவர்களுக்கு ஹோட்டல் அறை ஒதுக்கீடு செய்யாமல் 5 மணிநேரம் காக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் 2026 FIDE Chess Olympiad போட்டி இன்று தொடங்கி நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றனர். இதில் ஓபன் பிரவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி பங்கேற்கிறது.
போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து வீரர், வீராங்கனைகள் சென்றுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டில் ஹங்கேரி நாட்டின் புடாபஸ்ட் நகரில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் (கேப்ரின்டாஷ்விலி கோப்பை) வென்றது. இந்த பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 2 அணிகள் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளன.
இதில் டி குகேஷ், திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பி மற்றும் பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர இந்திய அணியை சேர்ந்த மற்றவர்களும் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உஸ்பெகிஸ்தான் சமர்கண்ட் விமான நிலையத்திற்கு நேற்று சென்னறர். விமான நிலையத்தில் இறங்கிய பிறகு அவர்களுக்கு ஹோட்டல் அறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதுபற்றி கேட்டதற்கு சரியான பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சுமார் 5 மணிநேரம் வரை இந்திய வீரர்கள், பிற உதவியாளர்கள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு உஸ்பெகிஸ்தான் செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர் அலிஷர் சாதுல்லேவ் மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) இணைந்து பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். இந்திய அணியை சேர்ந்தவர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முன்னதாக இந்த சம்பவத்துக்கு வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்திய ஓபன் அணியின் கேப்டனும் கிராண்ட் மாஸ்டருமான ஸ்ரீநாத் நாராயணன் வெளியிட்ட பதிவில், ”உஸ்பெகிஸ்தானில் தங்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாவில்லை. எப்போது ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தொடர்பான தகவலும் இல்லை” என்று கூறியிருந்தார்.
அதேபோல் கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தியும், ”ஒலிம்பியாட் 2026ல் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட்டில்முதல் இம்ப்ரஷன் மோசமாக உள்ளது. இன்னும் அறை ஒதுக்கப்படவில்லை. காத்திருக்கிறோம்” என பிரச்சனையை உறுதிப்படுத்தி இருந்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, வேல்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் அவர்களும் அவதியடைந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.