ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதானி நிறுவனம் இத்திட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக ஏற்கனவே தாராவியில் இருக்கும் பெரும்பான்மையான குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், மீனவர்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் பொதுமக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் தாராவியில் உள்ள பழைய குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் பங்களா போன்ற தனி வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு மாநில அரசு கொடுக்கும் 350 சதுர அடி வீடு போதுமானது கிடையாது என்று போர்க்கொடி தூக்கினர்.
தற்போது தாராவியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு 350 சதுர அடி வீடு இலவசமாக வழங்க அதானி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. குடிசையில் மாடி இருந்தால் அதற்கும் தனியாக ஒரு வீடு கொடுக்கவும் அதானி நிறுவனம் சம்மதித்து இருக்கிறது.
கட்டிடங்களில் வசிப்பவர்கள் மற்றும் தனிவீடுகளில் வசிப்பவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் வீடு அளவை அரசு அதிகரித்து இருக்கிறது. அவர்களுக்கு குறைந்த பட்சம் 500 சதுர அடியும், அதிக பட்சம் 754 சதுர அடியும் வீடு கொடுக்க மாநில அரசு அதானி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் உள்ள 8700 வீடுகள் பயனடையும். கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தாராவியில் கட்டிடங்கள் மற்றும் தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 500 சதுர அடி வீடு கொடுக்கும் வகையிலான திட்டத்தை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்தே இப்போது குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பங்களா போன்ற தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் வீடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையானது, இதற்கான திருத்த அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக, இந்த குடியிருப்பாளர்களுக்கு 400 சதுர அடி வீடு வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.