International
oi-Vigneshkumar
புளோரிடா: பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளிடம் ஆசிரியர்கள் அத்துமீறும் சம்பவம் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதற்கிடையே 17 வயது மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.. மேலும், சிறை தண்டனைக்கு பிறகும் கூட அவரை 15 ஆண்டுகள் கண்காணிப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக ஆசிரியர்கள் தான் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்கள் தவறான விஷயங்களை செய்தால்.. அதை எடுத்து கூறி அவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடமே இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் ஆசிரியர்களே மாணவர்களிடம் எல்லை மீறும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்தது.

என்ன நடந்தது
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ஹீதர் மாஷ்பர்ன்-ஸ்மித். 37 வயதான இவர் பள்ளியில் படித்து வந்த சிறுவனுடன் பாலியல் உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. போர்ட் சார்லட் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய அவர், ஏப்ரல் மாதத்தில் 17 வயது மாணவருடன் இரண்டு முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது..
இதையடுத்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாஷ்பர்ன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிறுவன் உடன் பாலியல் உறவு கொண்டதை அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். ஆசிரியராக இருந்து கொண்டு மாணவருடன் உடலுறவு கொண்டதால் அது தீவிரமான குற்றச்சாட்டாக கருதப்பட்டது.
கடுமையான குற்றம்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “இந்த பெண் செய்தது சட்டவிரோதமானது மட்டுமல்ல.. அவரை சுற்றியுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களையும் பாதிக்கும் செயல். அவரை நம்பி தான் குழந்தைகளை அவரிடம் விட்டு செல்கிறார்கள். ஆனால், அவர்களிடமே இவர் அத்துமீறியிருக்கிறார். இதை நாங்கள் மிகவும் தீவிரமான குற்றச்சாட்டாக எடுத்து கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.
புளோரிடா மாகாணத்தில் age of consent எனப்படும் பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளும் சட்டப்பூர்வ வயது 18 ஆகும். அதாவது 18 வயதிற்கு குறைவானவர்கள் தானாக முன்வந்து மேஜர் ஒருவருடன் உடலுறவு வைத்து கொண்டாலும் அது குற்றம் தான். 18 வயதிற்கு குறைவானவர்களுடன் அங்கு யாரும் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த விதி. இதனால் 17 வயது மாணவருடன் ஆசிரியர் பாலியல் உறவில் ஈடுபட்டது கடுமையான குற்றமாக கருதப்பட்டது.
தண்டனை
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாஷ்பர்ன் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே 118 நாட்கள் அவர் சிறையில் இருந்த நிலையில், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் கூட அவர் மீண்டும் சிறார்களிடம் எல்லை மீறுவதில்லை என்பதை உறுதி செய்ய 15 ஆண்டுகள் அவரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆசிரியர்களே மாணவர்களுடன் சட்டவிரோத பாலியல் உறவுகளில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஆசிரியர்களின் தவறான நடத்தை தொடர்பாக 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 10 மாணவ- மாணவிகளில் ஒருவர் அவர்களில் ஆசிரியராலேயே ஏதேனும் ஒரு வகையான பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
350 ஆசிரியர்கள் கைது
2023ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் சுமார் 350 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான இதுபோல தொடர்புகள் அதிகரிப்பது, ஆசிரியர் மாணவர் எல்லை மீறுவது ஆகியவற்றுக்கு ஆசிரியர்களின் பின்னணியை முறையாக செக் செய்யாமல் இருப்பது, ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி இல்லாதது உள்ளிட்டவை காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த மாதமும் அமெரிக்காவில் 25 வயது ஆசிரியர் ஒருவர் மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

