பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் “எல் நினோ (El Nino) விளைவால் நடப்பு 2026-ம் ஆண்டில் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில், ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது. இந்த இரட்டை சவால்களால் இந்தியாவில் பணவீக்கம் மிகக் கடுமையான நிலையை எட்டக்கூடும் என்றும், இதைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்றும் ஜெரோதா (Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதின் காமத் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “2026-ம் ஆண்டு மொத்தமாகச் சோதிக்கும் ஆண்டாக மாறிவருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் நடப்பு 2026-ம் ஆண்டில் வழக்கத்தை விட 6% குறைவான மழையே பெய்யும் என கணித்துள்ளது. இந்த 6% பற்றாக்குறை என்பது சிறியதாகத் தோன்றினாலும், நாட்டின் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழையளவில் கிட்டத்தட்ட 70% தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. மேலும், நாட்டின் 60%-க்கும் அதிகமான விவசாயிகள் இன்னமும் நீர்ப்பாசன வசதியின்றி, விவசாயத்திற்கு மழையையே நம்பியிருக்கிறார்கள். இதனால், பருவமழை குறைந்தால் அது கிராமப்புற மக்களின் வருமானத்தையும், உணவு உற்பத்தியையும் நேரடியாகப் பாதிக்கும்.