மாநில சுற்றுச்சூழல், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்த ஆரம்பக்கட்ட வடிவமைப்பின்படி, இந்த கட்டுப்பாடான அணுகல் கொண்ட விரைவுச்சாலை வழித்தடம் 12 மாவட்டங்கள் வழியே நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைக் கொண்டிருக்கும். இந்த மூடிய வழித்தடம் சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலையின் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொடங்கும். பின்னர் தற்போதுள்ள சென்னை – திருச்சி நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் இந்த விரைவுச்சாலை அமையும். மேலும், இந்த திட்டத்துக்காக மாவட்டங்களுக்கு இடையே 90 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.” என்றார்.
மேலும், இந்த திட்டம் குறித்து பேசிய அதிகாரிகள், “இது ஒரு பசுமைவழித் திட்டம் என்பதால், பாதையின் சில பகுதிகள் காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் வழியே செல்வதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதே இதில் உள்ள முக்கிய சவாலாக இருக்கும். இருப்பினும், மாநில அரசு இதற்கு முன்னுரிமை அளித்து தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. காகிதப் பணிகள் மற்றும் சட்டரீதியான நடைமுறைகள் ஓராண்டிற்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காவிரியின் குறுக்கே புதிய பாலம் ஒன்றும் கட்டப்படவுள்ளது.” என்றனர்.
வார இறுதி நாட்களில் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவிலான தனியார் வாகனங்கள் பயணிப்பதால் இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.