Business
oi-Vigneshkumar
மும்பை: இந்திய பங்குச்சந்தையில் நேற்று வியாழக்கிழமை வர்த்தக முடிவுக்கு முன்பு சென்செக்ஸில் ஏற்பட்ட திடீர் மற்றும் மிக பெரிய ஏற்ற, இறக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே சென்செக்ஸ் புட் ஆப்ஷனில் நேற்று சரியான நேரத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் வெறும் 5 நிமிடங்களில் சுமார் ரூ.44 லட்சம் லாபம் கிடைத்திருக்கும் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் பங்குச்சந்தைகளில் தான் நாம் குறுகிய காலத்தில் மிக பெரிய லாபத்தை அடைவார்கள். அதேபோல மிக பெரிய நஷ்டத்திற்கும் பங்குச்சந்தையில் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் தான் பங்குச்சந்தை பக்கம் போகவே பலரும் அஞ்சுவார்கள்.

புட் ஆப்ஷன்
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் மாலை புட் ஆப்ஷனில் சரியான நேரத்தில் முதலீடு செய்திருந்தால் மிக பெரிய லாபத்தை அள்ளி இருக்கலாம் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவர் இந்த வர்த்தகத்தை செய்யவில்லை. ஆனால், இதுபோல செய்திருந்தால் மிக பெரிய லாபத்தை அடைந்திருக்கலாம் என கணக்கு போட்டு சொல்லியிருக்கிறார்.
ரூ.43 லட்சம் லாபம்
அதாவது ஒருவர் நேற்று மாலை 3.15 மணிக்கு சென்செக்ஸ் 76,500ஆக இருக்கும்போது புட் ஆப்ஷனில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து, அதை 3.20 மணிக்கு விற்றிருந்தால் சுமார் ரூ.44 லட்சம் லாபம் கிடைத்திருக்கும் என பதிவிட்டுள்ளார். அதாவது வெறும் 5 நிமிடத்தில் ரூ.43 லட்சம் லாபம் கிடைத்திருக்கும் என அவர் கூறியிருக்கிறார். மாதாந்திர டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் காலாவதியான நாளில், வர்த்தகத்தின் இறுதி கட்டத்தில் சென்செக்ஸில் ஏற்பட்ட அசாதாரணமான மாற்றங்களே இதற்கு காரணமாகும்!
மாலை 3.17 மணியளவில் சுமார் 77,200 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ், 3.23 மணிக்குள் 74,983 புள்ளிகளுக்கு சரிந்தது. அதாவது, சில நிமிடங்களிலேயே 2,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியது. 3.23 மணி முதல் 3.30 மணி வரை அடுத்த 7 நிமிடங்களில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 2,000 புள்ளிகளை மீண்டும் ஏறியது.. இறுதியில், சென்செக்ஸ் 76,934 புள்ளிகளில் முடிவடைந்தது. இது முந்தைய நாள் முடிவை விட 539 புள்ளிகள் குறைவு என்றாலும் கூட 2000 புள்ளிகள் மீண்டு வந்தது பாசிட்டிவாகவே பார்க்கப்படுகிறது..
பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சில நிமிடங்களில் கடுமையாக சரிந்தது. ரிலையன்ஸ் பங்கு சுமார் ரூ.1,289ல் இருந்து வெறும் 7 நிமிடங்களில் ரூ.1,250 ஆக சரிந்தது. இருப்பினும், பின்னர் மீண்டும் வேகமாக உயர்ந்து ரூ.1,286ல் முடிந்தது. ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகளிலும் வர்த்தகத்தின் இறுதி சமயத்தில் பெரியளவில் இறங்கி, பிறகு மீண்டும் ஏறியது.
என்ன காரணம்!
இது முதலீட்டாளர்களிடையே மிக பெரிய கலக்கத்தை கொடுத்தது. இது புதிய குளோசிங் ஆக்ஷன் செஷன் (Closing Auction Session) முறை குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது. சந்தை முடிவில் பங்குகளின் இறுதி விலையை நிர்ணயிக்கும் இந்த புதிய முறையை மும்பை பங்குச்சந்தை ஆகஸ்ட் 3ம் தேதி அறிமுகப்படுத்தியது. ஒரு பங்கின் விலையை செயற்கையாக கட்டுப்படுத்துவதை தடுக்கவே இந்த புதிய முறையை மும்பை பங்குச்சந்தை கொண்டு வந்தது. ஈக்விட்டி டெரிவேட்டிவ்கள் வர்த்தகம் செய்யப்படும் சுமார் 200 பங்குகளுக்கு இந்த முறை தற்போது பொருந்துகிறது. மற்ற பங்குகளுக்கு பழைய முறை தொடர்கிறது.
இந்த புதிய முறை அறிமுகமானதிலிருந்து, மாலை 3.15 மணி முதல் 3.30 மணி வரை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் வழக்கத்திற்கு மாறான விலை ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சென்செக்ஸ் மற்றும் அதன் சில பங்குகளில் முறைகேடு செய்ததாக கூறி கடந்த வாரம் இரு முதலீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!